இந்தியாவின் முன்னணி தனியார் வாங்கியாக திகழும் ஹெச்டிஎப்சி கடந்த சில மாதங்களாக பல்வேறு நிர்வாக பிரச்சனையின் காரணமாக அதன் பங்குகள் பெரும் தடுமாற்றத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஹெச்டிஎப்சி வங்கியை தாங்கிப்பிடிக்க இந்தியாவின் மிகப்பெரிய லைப் இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி பெரும் தொகையை முதலீடு செய்து பங்குகளை வாங்க உள்ளது.
எல்ஐசி நிறுவனம் ஏற்கனவே ஹெச்டிஎப்சி வங்கியில் முதலீடு செய்து சுமார் 4.11 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நிலையில், தற்போது இந்த பங்கு அளவை 9.99 சதவீதம் வரையில் உயர்த்த ஆர்பிஐ அனுமதி கொடுத்துள்ளது.

இதுக்குறித்து இன்று ஹெச்டிஎப்சி வங்கி பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில், எல்ஐசி நிறுவனத்திற்கு 9.99 சதவீதம் அளவிலான பங்குகள் அல்லது நிர்வாகத்தில் வாக்கு உரிமையை பெற ஆர்பிஐ ஒப்புதல் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 14ஆம் தேதியின் நிலவரப்படி எல்ஐசி-யின் பங்கு இருப்பு தரவுகளின் படி 4.11 சதவீத பங்குகள் மட்டுமே வைத்திருந்துள்ளது, இந்த நிலையில் எல்ஐசி நிர்வாகம் இவ்வங்கியில் பங்குகளை கூடுதலாக வாங்க விருப்பம் தெரிவித்து ஆர்பிஐயிடம் ஒப்புதல் பெற விண்ணப்பம் செய்திருந்த நிலையில் தற்போது இதற்கான ஒப்புதல் வந்துள்ளது.
இதன் தாக்கம் பங்குச்சந்தையில் உடனடியாக எதிரொலித்துள்ளது என்றால் மிகையில்லை, இன்று காலை வர்த்தகத்திலேயே மும்பை பங்குச்சந்தையில் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் 1.03 சதவீதம் அதிகரித்து 727.40 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. ஆனால் இவ்வங்கியின் 52 வார உயர்வு என்பது 1,020.50 ரூபாய்.
எல்ஐசி முதலீட்டின் வாயிலாக ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் வேகமாக உயர வாய்ப்புள்ளது. ஹெச்டிஎப்சி வங்கி சமீபத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து பெரும் சரிவுக்கு தள்ளப்பட்டு உள்ளது. முக்கியமாக குறுகிய கால முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் நீண்ட கால முதலீட்டாளர்களும் பெரும் இழப்பை எதிர்கொண்டு இருக்கும் காரணத்தால் எல்ஐசியின் தலையீடு இந்த சரிவை கட்டுப்படுத்த முக்கிய பலமாக இருக்கும்.
இவ்வங்கி சமீபமாக எதிர்கொண்ட பிரச்சனைகள்.. மகாராஷ்டிர சாலை வளர்ச்சி கழகத்தின் வைப்பு நிதியில் செய்த குளறுபடி, நான் எக்ஸ்கியூடிவ் சேர்மன் அதானு சக்கரவர்த்தி திடீர் ராஜினாமாவும் அவர் கூறிய கரணங்களும், காலாண்டு முடிவுகளில் வெளியான மொத்த வட்டி விளிம்பு குறைந்து, இதர நிர்வாக பிரச்சனை காரணமாக கடந்த 8 மாதமாக தொடர்ந்து சரிவு பாதையில் ஹெச்டிஎப்சி பங்குகள் உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிக்கு இத்தகைய பிரச்சனையா என்பது உள்நாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரையில் முக்கிய பேசுப்பொருளானது.
இதன் விளைவாக 2026ஆம் ஆண்டில் மட்டும் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் 26.63 சதவீதம் சரிந்து அதன் உச்ச விலையில் இருந்து சுமார் 264 ரூபாய் குறைந்துள்ளது. இதுவே கடந்த ஒரு வருடத்தை கணக்கிட்டால் 26.85 சதவீதமாக குறைந்துள்ளது.
5 வருட காலத்தில் பார்த்தால் 3.99 சதவீதம் குறைந்துள்ளது, இதனால் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகளில் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளையில் எல்ஐசி பங்குகளும் 1.31 சதவீதம் உயர்ந்துள்ளது, 2026ஆம் ஆண்டில் தற்போது வரையில் வெறும் 1.85 சதவீத சரிவில் மட்டுமே உள்ளது. ஹெச்சிடிஎப்சி வங்கி முதலீட்டின் வாயிலாக இந்த சரிவில் இருந்து வேகமாக மீண்டு வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications