ஜூன் மாத சில்லறை பணவீக்கத்தில் ஏற்பட்ட சரிவு மற்றும் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் அமைப்பின் தலைவர் ஜெனெட் எலன் வட்டி உயர்வு குறித்த வெளியிட்ட அறிவிப்புகள் இந்திய சந்தைக்கு இன்று மிகப்பெரிய சாதகமாக அமைந்தது.
ஆனால் இன்றைய வரலாற்று உயர்வுக்கு இதுமட்டும் காரணமில்லை.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வர்த்தகத் துவக்கத்திலேயே தாடலடியாக 204 புள்ளிகள் உயர்ந்து 32,009 புள்ளிகள் என்ற வரலாறு காணாத உயர்வை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 60 புள்ளிகள் உயர்ந்து 9,876 புள்ளிகள் உயர்வுடன் இன்று வர்த்தகம் சிறப்பான முறையில் துவங்கியுள்ளது.
இன்றைய உயர்வுக்கு என்ன காரணம்.?
பெடரல் ரிசர்வ் அறிவிப்புகள்
அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெனெட் எலன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு மூலம் இதன் வட்டி உயர்வு கணக்கிட்டதை விடவும் மிதமான வேகத்தில் தான் இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளது.
ஒவ்வொரு காலாண்டுக்கும் தொடர்ந்து வட்டியை உயர்த்தத் திட்டமிட்ட பெடரல் ரிசர்வ் தற்போது அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கணக்கிட்டுத் தற்போது தனது முடிவுகளில் இருந்து பின்வாங்கியுள்ளது.
ஆசிய சந்தை
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு ஆசிய சந்தைக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. பொதுவாகப் பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தினால் ஆசிய சந்தையில் இருந்து அதிகளவிலான முதலீடுகள் வெளியேறும். தற்போது வட்டி உயர்வு காலதாமதம் ஆகும் என்பதால் அதிகளவிலான முதலீடுகள் ஆசிய சந்தையில் குவியும்.
இதன் மூலம் இன்று ஆசிய சந்தை வர்த்தகத்தில் ஆஸ்திரேலியா, ஷாங்காய், ஹாங்காங், ஜப்பான், தைவான், இந்தியா என அனைத்து முக்கியச் சந்தைகளும் சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
ஆசிய சந்தையின் இந்த உறுதியான நிலை இந்திய சந்தைக்கு மிகவும் சாதகமான அமைந்துள்ளது.
அமெரிக்கச் சந்தை
பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெனெட் எலன் அறிவிப்பு அமெரிக்கப் பங்குச்சந்தையின் டாவ் ஜோன்ஸ் தொழிற்துறை குறியீட்டையும் வரலாறு காணாத உயர்வுக்குக் கொண்டு சென்றுள்ளது.
அமெரிக்காவில் தற்போது நிலையான பொருளாதார வளர்ச்சி இருக்கும் காரணத்தால் பெடரல் ரிசர்வ் மிதானமான வேகத்தில் வட்டியை உயர்த்த முடிவு செய்துள்ளது.
ஜெனெட் எலன் அறிவிப்பு ஆசிய சந்தையில் இந்தியாவிற்கு மிகவும் சாதகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்னிய முதலீடு
இந்திய சந்தையில் இருக்கும் வளர்ச்சி வாய்ப்புகளால் ஈர்க்கப்பட்ட அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை செய்துள்ளனர்.
இதனால் ஜூன் 30 உடன் முடிவடைந்த காலாண்டில் நாட்டின் அன்னிய முதலீட்டு அளவு 4.007 பில்லியன் டாலர் உயர்ந்து, வரலாறு காணாத அளவான 386.539 பில்லியன் அளவை அடைந்துள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் முதலீட்டின் அளவு வெறும் 576.4 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம்
மேலும் நாட்டின் சில்லறை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 1999ஆம் வருடத்தைப் போல் 1.54 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது ரிசர்வ் வங்கியை வட்டி குறைக்க வழிவகைச் செய்துள்ளது.
வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் நடக்க உள்ளது. இதில் வட்டி விகிதத்தைக் குறைக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு குவிந்துள்ளது.