ஒரு நாட்டின் பட்ஜெட் அறிக்கை முதலீட்டைச் சந்தையில் பெரிய அளவில் பாதிக்கும், குறிப்பாகக் கொரோனா பாதிப்பில் இருந்து உலக நாடுகள் வேகமாக மீண்டு வருவதற்காக மிகப்பெரிய வளர்ச்சி திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் பட்ஜெட் அறிக்கையைப் பொருத்து தான் பங்குச்சந்தை செயல்பட உள்ளது. குறிப்பாக இந்தியாவில் பட்ஜெட் அறிவிப்புக்களுக்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர்.
அந்த வகையில் கடந்த 10 வருடத்தில் மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படும் முன் இந்திய பங்குச்சந்தையின் நிலை என்ன..? எப்படி வர்த்தகமானது..? இந்த வருடம் எப்படி இருக்கும்..? பட்ஜெட் அறிவிப்புகள் முதலீட்டாளர்களைக் குஷிப்படுத்துமா..? என்ற பல கேள்விகளுக்கான பதில் உங்களுக்காக.
11 வருட வரலாறு
2010 முதல் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய மாதம் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் முதலீட்டாளர்களை மிரட்டியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த 11 வருடத்தில் பட்ஜெட் அறிவிப்புக்கு முந்தைய மாதம் 7 முறை வீழ்ச்சி அடைந்துள்ளது. 4 முறை மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.
கொரோனா வைரஸ்
ஆனால் எப்போதும் இல்லாமல் இந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இந்திய பொருளாதாரம் மட்டும் அல்லாமல் உலக நாடுகளின் பொருளாதாரமும் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளனர்.
பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்
மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய மாத பங்குச்சந்தை நடவடிக்கை அவ்வளவு முக்கியமா என்று நீங்கள் கேட்டால், அதற்குப் பதில் ஆம். பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்) பொதுவாக ஒரு துறையில் வளர்ச்சி, நிறுவனத்தின் வளர்ச்சி, அதற்கான சாதகமாகச் சூழ்நிலை ஆகியவை உள்ளதா என்பதை ஆய்வு செய்த பின்பே முதலீடு செய்வார்கள். அந்த வகையில் பட்ஜெட்-க்கு முந்தைய காலப் பங்குச்சந்தை வர்த்தகம் பட்ஜெட் அறிவிப்புகள் சந்தையில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தைப் பிரதிபலிக்கும் ஒன்றாக உள்ளது.
2010 முதல் மும்பை பங்குச்சந்தை
இந்நிலையில் 2010, 2011, 2013, 2014, 2015, 2016 மற்றும் 2020 ஆகிய 7 வருடம் பட்ஜெட் அறிவிப்புக்கு முந்தை மாதம் சரிவைச் சந்தித்துள்ளது. அந்த வகையில் 2021ல் ஜனவரி மாதத்தில் சென்செக்ஸ் குறியீடு இதுவரை சுமார் 3 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
ஜனவரியில் சென்செக்ஸ்
டிசம்பர் 31,2020ஆம் தேதி சென்செக்ஸ் 47,751 புள்ளிகளை அடைந்த நிலையில், ஜனவரி 19, 2021 வர்த்தக முடிவில் 49,398.29 புள்ளிகளை அடைந்துள்ளது. இதன் மூலம் ஜனவரி மாதத்தின் முதல் 19 நாட்களில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 3.44 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் நாட்டின் உள்கட்டமைப்பு, ஹெல்த்கேர் மற்றும் உற்பத்தித் துறையைச் சார்ந்து தான் முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.