இந்திய சந்தைகள் போதும் போதும் எனும் அளவுக்கு கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே சரிந்து வருகின்றது. குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் இரண்டுமே தலா கிட்டதட்ட 2% சரிவினைக் கண்டுள்ளது.
குறிப்பாக சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேலும், நிஃப்டி 14,000 கீழும் முடிவடைந்துள்ளது.
இது நாளை எஃப்&ஓ எக்ஸ்பெய்ரி, நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், வரவிருக்கும் பட்ஜெட் 2021, அன்னிய முதலீடுகள் இப்படி பல காரணங்களில் பெரும் ஏற்ற இறக்கத்தினை சந்தித்து வருகின்றது.
முக்கிய சப்போர்ட்
கடந்த சில அமர்வுகளுக்கு முன்பு நிஃப்டியின் மீடியம் டெர்ம் சப்போர்ட் விகிதம் 14,250 என்று கூறியிருந்தோம். அதனை உடைத்து சென்றால் அடுத்த இலக்காக 13,950 புள்ளிகள் வரை செல்லலாம் என்றும் கூறியிருந்தோம். இந்த லெவலில் சந்தை இல்லாவிட்டால், அடுத்தது 13,600 என்ற புள்ளிகளை சந்திக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது நல்ல வாய்ப்பு
அதே நேரம் ஏற்றம் காணும் பட்சத்தில் 14,550 - 14600 வரை செல்லலாம் என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த புள்ளிகளுக்கு மேலாக சந்தை மூடாத வரை, தொடர்ந்து சந்தை சரிவினையே காணும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் இந்த சரிவானது நல்ல லாபத்திற்கு ஆரம்பமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்னும் சரியலாம்
இதே ஜியோஜித் பைனாஷியல் நிறுவனத்தின் நிபுணர் இந்த சரிவு, பட்ஜெட்டுக்கு முந்தைய சரிவு என்றும் கூறியுள்ளார். அதோடு கடந்த இரண்டு சந்தை அமர்வுகளாகவே அன்னிய நிறுவன முதலீடுகளும் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. இப்படி பல்வேறு காரணங்களுக்கு மத்தியில் சந்தையானது இன்று 14,000 கீழாக முடிவடைந்துள்ளது. இன்னும் சற்று சரியும் விதமாகவே காணப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.
வளர்ச்சி அதிகரிக்கும்
எனினும் சர்வதேச நாணய நிதியம், சர்வதேச ஜிடிபி விகிதத்தினை நடப்பு ஆண்டில் மேல் நோக்கி மாற்றியமைத்துள்ளது. இதே இந்தியாவின் ஜிடிபி விகிதத்தினையும் 2021ம் ஆண்டிற்காக வளர்ச்சி விகிதத்தினை 11.5% ஆக இருக்கும் என்று மேல் நோக்கி அதிகரித்துள்ளது. ஆக இது வளர்ச்சிக்கான நல்ல அறிகுறி என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் நிஃப்டி கீழாக சரிந்தாலும், அது மீண்டும் வளர்ச்சி காணும். அது அப்போது நிலையான வளர்ச்சியாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.