சர்வதேச முதலீட்டுச் சந்தையில் ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த சிப், டேட்டா சென்டர், டெக் நிறுவனப் பங்குகளில் இருந்து முதலீடு வெளியேற துவங்கிய நாளில் இருந்து இந்திய பங்குச்சந்தைக்குச் சாதகமாகக் காலம் உருவாகியுள்ளது. இதன் எதிரொலியாக வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ், நிஃப்டி என இரண்டும் தலா 1 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் சர்வதேச சந்தையில் இருந்து வந்த சாதகமான சூழ்நிலை மிட் கேப், ஸ்மால் கேப் பங்குகளும் உயர துவங்கியுள்ளது. இதன் மூலம் 2வது நாளாக உயர்ந்து வரும் இந்தியச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 828 புள்ளிகள் உயர்ந்து 77,569.39 புள்ளிகளை எட்டியுள்ளது, இதேபோல் நிஃப்டி குறியீடு 244 புள்ளிகள் உயர்ந்து 24,206.90 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

இதேபோல் நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 1.40 சதவீதமும், ஸ்மால்கேப் 100 குறியீடு அதிகப்படியாக 1.55 சதவீதமும் உயர்ந்துள்ளது. இன்றைய உயர்வின் மூலம் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளனர். இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.476 லட்சம் கோடியில் இருந்து ரூ.482 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 2 நாள் வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 1066 புள்ளிகள் உயர்ந்துள்ளது, நிஃப்டி 325 புள்ளிகள் உயர்ந்துள்ளது. ஆனால் இந்த வாரம் மொத்தமாகக் கணக்கிட்டால் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு சுமார் 0.25 சதவீதம் சரிந்துள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 76 டாலராக உயர்ந்துள்ளது, இதன் வாயிலாக அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 16 பைசா உயர்ந்து 95.31 ரூபாயாக உள்ளது, நேற்றைய வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 95.47 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications