இன்று காலையிலேயே சென்செக்ஸ் வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களில் சுமாராக 3,090 புள்ளிகள் சரிந்தது. ஒட்டு மொத்தமாக சென்செக்ஸ் சுமாராக 29,687 புள்ளிகளைத் தொட்டு 9.5 சதவிகிதம் சரிந்ததால், பங்குச் சந்தை வர்த்தகத்தை நிறுத்தி இருக்கிறார்கள்.
அதே போல நிஃப்டியும் இன்று காலை முதலே சரிவில் தான் வர்த்தகமாகத் தொடங்கியது. சுமாராக 966 புள்ளிகள் சரிந்து நிஃப்டி 8,624 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சுமாராக 45 நிமிடங்களுக்குப் பின், இந்திய பங்குச் சந்தைகள் மீண்டும் புதிதாக வர்த்தகமாகத் தொடங்கும் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
circuit filter
பொதுவாக, பங்குச் சந்தை இண்டெக்ஸ் 10 சதவிகிதத்துக்கு மேல் சரிந்தாலோ அல்லது உயர்ந்தாலோ அப்போது ஒட்டு மொத்த சந்தையையும் வர்த்தகம் நடை பெறாமல் நிறுத்துவார்கள். அதைத் தான் சர்க்யூட் ஃபில்டர் என்பார்கள். இப்போது இந்திய பங்குச் சந்தைகளிலும் அது தான் நடந்து இருக்கிறது.
12 ஆண்டுகள்
கடந்த 12 ஆண்டுகளில், இந்திய பங்குச் சந்தைகளில் மேலே சொன்ன சர்க்யூட் ஃபில்டர் வந்தது இதுவே முதல் முறையாம். இப்படி ஒட்டு மொத்த இந்தியாவையே பங்குச் சந்தை செய்திகள் அலற விட்டுக் கொண்டு இருக்கிறது. 45 நிமிடங்களுக்குப் பிறகு, சுமார் 10.20 மணிக்கு மீண்டும் இந்திய பங்குச் சந்தைகளை திறக்க இருக்கிறார்கள் எனச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
அமெரிக்க சந்தைகள்
இப்போது இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நிறுத்தி இருப்பது போல, உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான, அமெரிக்காவில் கூட எஸ் & பி 500 போன்ற பங்குச் சந்தை இண்டெக்ஸ்கள் நேற்றே இரண்டு முறை வர்த்தகத்தை நிறுத்தி இருக்கிறார்கள். அந்த அளவுக்கு உலகம் கொரோனா அலையில் பயந்து கிடக்கிறது.
கொரோனா கோரம்
கொரோனா வைரஸ், இந்தியா உட்பட உலகின் 6 கண்டங்களில் இருக்கும் 115 நாடுகளுக்கு மேல் பரவி ஒட்டு மொத்த உலகத்தையும் பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது உலகம் முழுக்க சுமாராக 1,34,000 மக்கள் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 4,970 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.