கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20, 2019) அன்று காலை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிகளை அதிகபட்சம் 25.17 சதவிகிதமாக குறைத்தார். "பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய.." என மெர்சல் விஜய் போல சென்செக்ஸில் சந்தை தீ பற்றி எரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 1921 புள்ளிகள் அதிகரித்து ஒரே நாளில் சென்செக்ஸ் 38,014 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்தது.
அதன் பிறகு இன்றும் காலை சென்செக்ஸ் 38,844 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 39,090 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 1,075 புள்ளிகள் அதிக ஏற்றம் கண்டு இருக்கிறது. ஆக மொத்தம் இரண்டு வர்த்தக நாளில் சுமாராக சென்செக்ஸ் 3,000 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்டு இருக்கிறது. இந்த ஏற்றத்தால் மட்டும் பங்குகளின் மதிப்பு சுமாராக 10 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து இருக்கிறதாம்.
பங்குச் சந்தை இப்படி தட்டித் தூக்க, வங்கி இண்டெக்ஸ் மட்டும் சுமாராக இரண்டு நாளில் 14 % அதிகரித்து இருக்கிறது. ஐசிஐசிஐ பேங்க், ஹெச் டி எஃப் சி பேங்க் ஆகிய பங்குகள் தன் புதிய 52 வார உச்ச விலையைத் தொட்டு வர்த்தகமாயின. எஃப் எம் சி ஜி பங்குகளான ஹெச் யூ எல், ஐடிசி ஆகிய பங்குகளும் ஒரு நல்ல ஏற்றம் கண்டு இருக்கின்றன. தரகு நிறுவனங்கள் மற்றும் அனலிஸ்டுகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிகர லாப அளவுகளை மாற்றிக் கணக்கிட்டுக் கொண்டு இருக்கிறார்களாம். வரும் ஜூன் 2020-க்குள் சென்செக்ஸ் 45,000 புள்ளிகளைத் தொடும் என இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது, மார்கன் ஸ்டான்லி.
இருப்பினும் இந்த திடீர் ஏற்றங்களை அதிகம் நம்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கிறார்கள் அனலிஸ்டுகள். அதோடு இந்த நேரத்தில் நல்ல தரமான அடிப்படைகளைக் (Fundamentals) கொண்ட பங்குகளில் முதலீடு செய்து சொத்துக்களைச் சேர்க்குமாறும் அறிவுறுத்துகிறார்கள் அனலிஸ்டுகள். ஏற்கனவே இந்தியாவின் வாரன் பஃபெட் ராகேஷ் ஜுன் ஜுன் வாலா, இந்த நேரத்தில் நல்ல பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யச் சொன்னதும் கவனிக்கத்தக்கது. எனவே மக்களே உஷாராக உங்கள் முதலீடுகள் மற்றும் வர்த்தகங்களை மேற் கொள்ளவும்.