இந்தியா பங்கு சந்தையானது வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சற்று சரிவில் தொடங்கி, பலத்த சரிவிலேயே முடிவடைந்துள்ளது. வாரத்தின் முதல் வர்த்தக நாளே பெரும் சரிவினைக் கண்டுள்ள நிலையில், இனி வரும் நாட்களில் எப்படி இருக்குமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் சென்செக்ஸ் 1456 புள்ளிகள் குறைந்து, 52,846 புள்ளிகளாக வர்த்தகமாகி முடிவடைந்தது. நிஃப்டி 427 புள்ளிகள் குறைந்து 15,749 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இது கடந்த வெள்ளிக்கிழமையன்று 16,201 புள்ளிகளாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சந்தை மதிப்பு வீழ்ச்சி
பி எஸ் இ-யில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் சந்தை மதிப்பானது 251.81 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 245.33 லட்சம் கோடி ரூபயாக சரிவினைக் கண்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் 6.48 லட்சம் கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.
சர்வதேச சந்தைகள் பலத்த சரிவினைக் கண்ட நிலையில், அதன் எதிரொலி இந்திய சந்தையும் சரிவினைக் கண்டுள்ளது.
என்ன காரணம்?
அமெரிக்காவின் பணவீக்கம் குறித்த அச்சம், கொரோனா பரவல் கட்டுப்பாடுகள், அமெரிக்க ஃபெடரல் வங்கி நடவடிக்கை குறித்த பலத்த எதிர்பார்ப்பு என பல காரணிகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் முதலீடுகளை செய்யாமல் காத்துக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக சந்தையானது அழுத்தத்தில் காணப்படுகின்றன.
நல்ல வாய்ப்பு கிடைக்கலாம்
மீடியம் டெர்மில் சந்தையானது மேற்கோண்டு அழுத்தம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையலாம். குறைந்த விலையில் நல்ல நிறுவன பங்குகளை வாங்க வாய்ப்புகள் கிடைக்கலாம். சந்தையானது சரிவினைக் கண்டாலும் நல்ல நிறுவனங்கள் வலுவான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளன.
டாப் லூசர்கள்
தற்போது பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டு இருக்கும் நிலையில், உள்நாட்டு நுகர்வானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிறுவனங்களின் வளர்ச்சியினை தூண்டலாம்.
இதற்கிடையில் பஜாஜ் ட்வின்ஸ், இந்தஸ் இந்த் வங்கி, டெக் மகேந்திரா, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் சென்செக்ஸ் குறியீட்டில் டாப் லூசர்களாக உள்ளன. மேற்கண்ட பங்குகள் 7.02 சதவீதம் வரையில் சரிவினைக் கண்டுள்ளன. நெஸ்டில் மட்டும் கெயினராகவும் உள்ளது.
ஓராண்டு நிலவரம்
நடப்பு ஆண்டில் இன்றைய சரிவுடன் சேர்த்து சென்செக்ஸ் 9.28% அல்லது 5407 புள்ளிகள் சரிந்தும், நிஃப்டி 1579 புள்ளிகள் அல்லது 9.10% சரிவினையும் கண்டுள்ளது. இதே கடந்த ஒராண்டில் சென்செக்ஸ் 0.71% அல்லது 371 புள்ளிகள் அதிகரித்தும், நிஃப்டி 0.16% அல்லது 16 புள்ளிகள் சரிந்தும் காணப்படுகிறது.
பல குறியீடுகள் சரிவு
பி எஸ் இ மிட் கேப், ஸ்மால் கேப் குறியீடுகள் 613 புள்ளிகள் மற்றும் 814 புள்ளிகள் சரிந்தும் காணப்பட்டது. வங்கி பங்குகள் மிகப்பெரிய இழப்பீட்டாளர்களாகவும் இன்று இருந்தன, பி எஸ் இ வங்கி குறியீடு 1241 புள்ளிகள் சரிந்து, 38,494 புள்ளிகளாகவும், ஐடி, கேப்பிட்டல் குட்ஸ், கன்சியூமர் டியூரபிள் குறியீடுகள் முறையே 1156, 745 மற்றும் 743 புள்ளிகள் சரிந்தும் காணப்படுகிறது. பேங்க் நிஃப்டி 1078 புள்ளிகள் சரிந்து, 33,405 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.