சென்னையை தலைமையிடமாக கொண்ட பிரபல நகை விற்பனை நிறுவனமான லலிதா ஜூவல்லரி மார்ட், ஐபிஓ வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சாதாரண மக்களும் லலிதா ஜூவல்லரி நிறுவனத்தில் பங்குதாரராக முடியும். நிறுவனத்தின் லாபம் ஏற ஏற உங்களின் முதலீடும் வளர்ச்சி அடையும்.
லலிதா ஜூவல்லரி நிறுவனத்தின் ஐபிஓ இன்று வெளியிடப்பட்டுள்ளது. சில்லறை முதலீட்டாளர்கள் இன்று முதல் இதற்காக விண்ணப்பம் செய்யலாம். 19ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஓ-வின் மொத்த மதிப்பு சுமார் 1,700 கோடி ரூபாய் ஆகும். இதில் 1,200 கோடி ரூபாய் புதிய பங்கு வெளியீடாகவும் (Fresh Issue), மீதமுள்ள 500 கோடி ரூபாய் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் எம். கிரண் குமார் ஜெயின் வழங்கும் பங்கு விற்பனையாகவும் (OFS) உள்ளது.

லலிதா ஜூவல்லரியின் ஒரு பங்கின் விலை 190 முதல் 201 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 74 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதன்படி, ஒரு சில்லறை முதலீட்டாளருக்கு தேவையான குறைந்தபட்ச முதலீடு 14,874 ஆகும். அதாவது ஒரு லாட்டிற்கு விண்ணப்பம் செய்ய 14,874 ரூபாய் தேவை.
மொத்த பங்குகளில் தகுதியுள்ள நிறுவன முதலீட்டாளர்களுக்கு 50%, சில்லறை முதலீட்டாளர்களுக்கு 35% மற்றும் நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர்களுக்கு 15% பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எனவே சில்லறை முதலீட்டாளர்கள் தங்களின் டீமேட் கணக்கு வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
லலிதா ஜூவல்லரி தமிழகத்தில் புகழ்பெற்ற நகை விற்பனை நிறுவனமாகும். 61 இடங்களில் கடைகளை நிறுவியுள்ளது.இந்த நிறுவனம் தனது நிதி நிலையில் பெரும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2025ஆம் நிதியாண்டில் 16,907.88 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம், 2026ஆம் நிதியாண்டில் 25,039.80 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், லாபமும் 364.73 கோடி ரூபாயிலிருந்து 1,009.82 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியை, நிறுவனம் முக்கியமாக 10 புதிய கிளைகளை திறப்பதற்கும், அதற்கான இருப்பு மற்றும் கடை அமைப்பிற்கான செலவுகளுக்கும் பயன்படுத்த உள்ளது.
பங்கு சந்தை ஆய்வாளர்கள் மற்றும் தரகு நிறுவனங்கள், லலிதா ஜூவல்லரியின் வலுவான நிதி செயல்பாடு மற்றும் அதன் விரிவான திட்டங்களை கருத்தில் கொண்டு, நீண்ட கால முதலீட்டு வாய்ப்பாக கருதி இதனை வாங்கலாம் என்கின்றனர். கிரே மார்க்கெட்டில் இப்பங்கு 15% பிரீமியத்தில் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பங்குகளுக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு பங்கு ஒதுக்கீடு உறுதி செய்யப்படும் தேதி ஆகஸ்ட் 20. ஆகஸ்ட் 24ஆம் தேதி பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-இல் பங்குகள் பட்டியலிடப்பட உள்ளன. இந்தியாவில் தங்கம் விற்பனையும் அதன் மதிப்பும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து தான் விற்கிறது. எனவே இந்த பங்கு பட்டியலிடப்படும் போதே பிரீமியமாகவே பட்டியலாகும் என சொல்லப்படுகிறது.எஸ்பிஐ செக்யூரிட்டீஸ் இந்த ஐபிஓ-விற்கு நியூட்ரல் என்ற நிலையை அறிவித்துள்ளது. ஸ்வஸ்திகா இன்வெஸ்ட்மார்ட் நிறுவனம் சப்ஸ்கிரைப் செய்யலாம் என்ற மதிப்பீட்டை வழங்கியுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

