வரலாற்றில் முதன் முறையாக மும்பை பங்கு சந்தை வரலாற்றிலேயே சென்செக்ஸ் 50,000 புள்ளிகளை இன்று தாண்டியுள்ளது.
நாட்டில் கொரோனாவின் தாக்கத்தினால் பொருளாதாரம் சரிவில் இருந்து வரும் இந்த நிலையில் கூட, இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றன.
சொல்லப்போனால் கொரோனாவின் வருகைக்கு பிறகு சந்தைகள் பலத்த ஏற்றம் கண்டு வருகின்றன. குறிப்பாக சென்செக்ஸ் இரு மடங்கு ஏற்றத்தினை கண்டுள்ளது.
பலத்த சரிவு
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் இந்திய சந்தைகள் தரைதட்டின. சொல்லப்போனால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சுமார் 25,638 புள்ளிகளாக இருந்தது. ஆனால் அதன்பிறகு சர்வதேச சந்தை எதிரொலி, குறிப்பாக அன்னிய முதலீடுகள் வரத்து என பல காரணங்களுக்காக சந்தை ஏற்றம் காண ஆரம்பித்தது.
முதலீட்டாளர்கள் ஆர்வம்
அதோடு தற்போது நாட்டில் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அது இன்னும் பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வத்தினை தூண்டியுள்ளது. கடந்த 1990ம் ஆண்டில் சென்செக்ஸ் முதல் முறையாக 1000 புள்ளிகளை தொட்டது. இதே 2000ம் ஆண்டில் 6000 புள்ளிகளைக் கடந்தது.
சென்செக்ஸ் வரலாறு
இதன் பிறகு 2006ல் 10,000 புள்ளிகளையும், 2007ல் 15,000 புள்ளிகளையும் கடந்தது. இப்படி படிப்படியாக ஏற்றம் கண்டு வந்த சென்செக்ஸ் 2007ம் ஆண்டு இறுதியிலேயே 20,000 புள்ளிகளையும் கடந்து சாதனை படைத்தது. இதன்பிறகு கடந்த 2018ல் தான் 35,000 புள்ளிகளையும் தொட்டது. அதன்பிறகு பெரியளவில் மாற்றமில்லாமல் இதே அளவில் தான் வர்த்தகமாகி வந்தது.
இன்று சாதனை படைத்த சென்செக்ஸ்
ஆனால் அதன் கடந்த 2020ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் மீண்டும் மிகப்பெரிய சரிவினைக் கண்டு, இன்று 50,000 புள்ளிகளையும் தாண்டி சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவின் பங்கு சந்தைகள் தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், அதன் எதிரொலியாக ஆசிய சந்தைகளும் வரலாறு காணாத உச்சத்தினை தொட்டு வருகின்றன.
நிஃப்டியும் தொடர் ஏற்றம்
சென்செக்ஸ் தான் புதிய உச்சம் எனில், அதற்கு போட்டியாக நிஃப்டியும் உச்சம் தொட்டு வரும் நிலையில் 14,700 புள்ளிகளை தொட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பே 14550 - 14600 ஐ கடந்தால் நிஃப்டி 14,900 தொடலாம். இதன் பின்னர் வெற்றிகரமாக 15,000 தொடலாம் என்றும் கூறியிருந்தோம். எனினும் முக்கிய சப்போர்ட் விகிதம் 14300 என்றும் கூறியிருந்தோம். இந்த நிலையில் நிஃப்டியும் தொடர்ந்து காளையின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது. எது எப்படியோங்க முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் தான்..