2018-19ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்து முடித்துள்ளார்.
பட்ஜெட் அறிக்கையில் பங்குச்சந்தை முதலீட்டுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், நீண்ட கால முதலீட்டின் மீது 10 சதவீத வரியை விதித்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியுடன் சோகத்தையும் அளித்தது.
ஜனவரி 31
நீங்கள் முதலீடு செய்த பங்கின் மீதான காலம் 1 வருடத்திற்கு அதிகரித்து இதன் மூலம் கிடைக்கும் லாபம் 1 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் இதற்கு LTCG வரியாக 10 சதவீத வரி செலுத்த வேண்டும்.
நீண்ட கால முதலீட்டாளர்கள்
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீட்டை மையமாக வைத்து இயங்கக் கூடியவர்களாக உள்ள நிலையில், மத்திய அரசு இவர்களைக் கட்டம் கட்டிய படி 10 சதவீத வரியை தடாலடியாக விதித்துள்ளது.
இதன் மூலம் பங்குச்சந்தையின் அதிரடி வளர்ச்சிகளை இனி காண்பது சற்றுக் கடினம்.
திடீர் வீழ்ச்சி
LTCG வரி குறித்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் சென்செக்ஸ் குறியீடு சுமார் 400 புள்ளிகள் வரையில் சரிந்தது.
வீழ்ச்சியும் மீட்சியும்..
இந்நிலையில் பெரும் முதலீட்டு நிறுவனங்கள், மீயூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ஆகியவை அதிகளவில் முதலீடு செய்த காரணத்தால் மும்பை பங்குச்சந்தை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
இன்றைய வர்த்தகத்தில் இன்டிரா டே சிவிங் 400 புள்ளிகளைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நிஃப்டி குறியீடு இன்று அதிகப்படியாக 120 புள்ளிகள் வரையில் சரிவை சந்தித்தது.
நிலைபெற்றது..
2.50 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 22.43 புள்ளிகள் உயர்ந்து 35,987.45 புள்ளிகளை எட்டியது, அதேபோல் நிஃப்டி குறியீடு 13.95 புள்ளிகள் உயர்ந்து 11,041.65 புள்ளிகளை அடைந்திருந்தது.