புதன்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 300 புள்ளிகளுக்கு அதிகமான வளர்ச்சியைச் சந்தித்தாலும், சில நிமிடங்களில் மளமளவென சரிந்து மீண்டும் உயரத் துவங்கியுள்ளது.
இந்தத் தடுமாற்றம் இந்தியா சந்தையில் மட்டும் அல்லாமல் ஆசியச் சந்தையில் அனைத்திலும் இருக்கும் காரணத்தால் இன்றைய வர்த்தகம் லாபகரமாக இருந்தாலும், தொடர்ந்து தடுமாற்றத்துடனே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் முதலீட்டாளர்கள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அமெரிக்கச் பங்குச்சந்தை
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் அமெரிக்கப் பங்குச்சந்தை சரிவு முடிந்துள்ளது ஆசிய சந்தையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. நேற்றைய வர்த்தக முடிவில் அமெரிக்கப் பங்குச்சந்தையின் நாஸ்டாக் குறியீடு 143.99 புள்ளிகளை இழந்து 0.46 சதவீதம் சரிந்துள்ளது. இதேபோல் S&P 500 குறியீட்டில் 31.53 புள்ளிகள் இழந்து 3,870.29 புள்ளிகளை அடைந்துள்ளது. இதனால் S&P குறியீடு 0.81 சதவீதம் சரிந்துள்ளது.
ஆசிய பங்குச்சந்தை
அமெரிக்கச் சந்தையில் ஏற்பட்டு உள்ள சரிவு ஆசியச் சந்தையில் இதன் தாக்கம் எதிரொலித்தது. இதன் காரணமாக ஜப்பான் நிக்கி, தென் கொரியாவின் காஸ்பி, சீனாவின் ஷாங்காய் காம்போசிட் ஆகியவை தடுமாற்றத்துடன் வர்த்தகம் துவங்கினாலும் லாபகரமான வர்த்தகத்தைப் பதிவு செய்து வருகிறது. ஆசியச் சந்தையில் அனைத்து முக்கிய நாடுகளும் 0.6 சதவீதம் உயர்வில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நிப்டி குறியீடு
இன்று காலை வர்த்தகத்தில் நிப்டி குறியீடு அதன் சப்போர்ட் அளவான 14,800 முதல் 14,998 புள்ளிகளுக்கு மத்தியில் வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் கவலையில் இருந்தனர். இதற்கு முக்கியக் காரணம் இன்றைய வர்த்தகத்தில் 14,800 புள்ளிகளுக்குக் கீழ் சென்றால் வர்த்தகம் தொடர்ந்து சரிய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இதேபோல் 14,998 புள்ளிகளைத் தாண்டினால் தொடர்ந்து உயர அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதால் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
இந்நிலையில் 10.30 மணியளவில் நிஃப்டி குறியீடு 111 புள்ளிகள் உயர்ந்து 15,000 புள்ளிகள் அளவீட்டைத் தாண்டி 15,030.90 புள்ளிகளைத் தொட்டு உள்ளது. ஆனால் இன்று வர்த்தகம் துவங்கும் போது நிஃப்டி குறியீடு 15,064.80 புள்ளிகளில் துவங்கியது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ் குறியீடு
இதேபோல் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தகத்தில் 9.45 மணிக்கு ஏற்பட்ட சரிவுக்குப் பின்பு தொடர் வளர்ச்சியில் உள்ளது. இதனால் 10.30 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 455 புள்ளிகள் வரையில் உயர்ந்து 50,752.61 புள்ளிகள் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களைக் காப்பாற்றியுள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள்
மேலும் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பவர்கிரிட், ஏசியன் பெயின்ட்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதி, பஜாஜ் ஆட்டோ ஆகியவை சரிவில் தவித்து வருகிறது.