திங்கட்கிழமை மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஆட்டோமொபைல் மற்றும் வங்கித் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்கு மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் காலை வர்த்தகம் துவக்கம் முதல் தொடர் சரிவைப் பதிவு செய்தது.
இதனால் சென்செக்ஸ் குறியீடு இன்று 250 புள்ளிகள் அளவிலான சரிவை சந்தித்தது.
ஆட்டோமொபைல் முதல் வங்கி
வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் நாட்டின் தொழிற்துறை உற்பத்தி அளவுகள் குறைந்ததன் காரணமாக ஆட்டோமொபைல் மற்றும் தொழிற்துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
மேலும் மோடியின் 500 மற்றும் 1000 மீதான தடை மற்றும் அதன் பாதிப்பில் இருந்து இன்னும் மீள முடியாத நிலையில் இன்று வங்கி பங்குகளும் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டது.
ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள்
திங்கட்கிழமை வர்த்தகம் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைக்கும் மோசமானதாக அமைந்ததால், இந்திய சந்தையை மேலும் பாதித்தது.
அமெரிக்கா
செவ்வாய்க்கிழமை துவங்க உள்ள அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதங்களை உயர்த்த அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாகவும் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள் இன்று சரிவுடன் காணப்பட்டது.
டொனால்டு டிரம்ப்
அமெரிக்க ஊழியர்கள் வெளியேற்றி விட்டு ஹெச்-1பி, எல்-1 விசா மூலம் பிற நாட்டவர்களைப் பணியில் அமர்த்திய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் அமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
இதனால் இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் பல முக்கிய ஐடி நிறுவனங்களின் பங்குகள் சரிவைத் தழுவியது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 231.94 புள்ளிகள் சரிந்து 26,515.24 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நீஃப்டி குறியீட்டின் தொடர் வர்த்தகச் சரிவில் 90.95 புள்ளிகள் வரை சரிந்து 8,170.80 புள்ளிகளை அடைந்தது.