சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய சந்தைகள் தொடர்ந்து ஆறாவது நாளாக புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றன.
தொடக்கத்தில் சற்று சரிவினைக் கண்ட இந்திய சந்தைகள், பின்னர் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியது. இந்த நிலையில் தேசிய பங்கு சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி, முதல் முறையாக 14,000 புள்ளிகளை தாண்டியுள்ளது.
அதிலும் இன்றோடு இந்த ஆண்டு முடிவடையவிருக்கும் நிலையிலும். எஃப்&ஓ எக்ஸ்பெய்ரி என்பதாலும், இது முதலீட்டாளர்களுக்கு கிடைத்த ஜாக்பாட் என்றே கூறலாம். ஏனெனில் தங்களது லாபத்தினை புக் செய்ய இது நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரம் என்ன?
குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 47,860.3 என்ற சாதனை புள்ளிகளையும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 14,009 என்ற உச்சத்தினையும் தொட்டுள்ளது.
இன்று தொடக்கத்தில் சற்று சரிவினைக் கண்டாலும், அதன் பின்னர் ஏற்றம் காணத் தொடங்கிய சந்தையானது, முந்தைய உச்ச விலையானது 13,997.85 என்ற உச்சத்தினையும் தாண்டியது. கடந்த நவம்பர் 24 அன்று நிஃப்டி 50 அதன் முக்கிய லெவலான 13,000 மேல் இருந்த நிலையில், அன்று முடிவில் 13,055 ஆகவும் முடிவுற்றது. எனினும் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலை தாண்டி முடிவுற்றது குறிப்பிடத்தக்கது.
நிஃப்டி எதிர்பார்ப்பு?
இதற்கிடையில் கடந்த டிசம்பர் 1க்கு பிறகு, அதன் முக்கிய லெவலான 13,000 மேலேயே இருந்து வருகின்றது. இந்த நிலையில் இன்று 14,000 புள்ளிகளையும் உடைத்து காட்டியுள்ளது. இது முடிவிலும் 14,000 மேலே தொடருமானால் அடுத்து 14,100 - 14,150 என்ற லெவலை தொடலாம். ஏனெனில் சந்தை ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் முக்கிய சப்போர்ட் விகிதம் என எடுத்துக் கொண்டால் அது 13,550 - 13,600 என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ரூபாய் எதிர்பார்ப்பு
இதற்கிடையில் ரிலிகேர் புரோக்கிங் நிறுவனம், அடுத்த ஆண்டில் ரூபாயின் மதிப்பானது 76.00 - 76.50 ரூபாயினை தொடலாம் என்றும் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹெச்டிஎஃப்சி, மாருதி சுசூகி, ஐசிஐசிஐ வங்கி, டிவிஸ் லேப், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும் உள்ளன.
என்ன காரணம்
இது தொடர்ந்து FPI மற்றும் FII முதலீடுகள் வரத்துகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த மூன்று மாதங்களில் சுமார் 20.56 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக முதலீடுகள் வந்துள்ளது. இது இந்திய ரூபாய்க்கு முக்கிய ஆதரவாக இருந்து வருகின்றது. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பு ஒரு வேளை இன்னும் அதிகரிக்குமானால் 72.80 - 73 ரூபாய் வரையில் அதிகரிக்கலாம். தற்போது வரையில் 73 - 74 ரூபாயாக இருந்து வருகின்றது. ஆக இது சந்தைக்கு சாதகமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் நம்பிக்கை
முதலீட்டாளர்கள் பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும் என்ற நம்பிக்கைக்கு மத்தியில், குறைந்த விலையில் உள்ள பங்குகளை வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக இந்திய பங்கு சந்தைகள் தொடர்ச்சியான ஏற்றத்தினை கண்டு வருகின்றன. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக FII & FPI, DII வரத்தும் அதிகரித்துள்ளது.
தற்போது என்ன நிலவரம்
சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சங்களை தொட்டிருந்தாலும், தற்போது சென்செக்ஸ் 10 புள்ளிகள் அதிகரித்து, 47,756.64 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 1.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 13,983.65 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 73.29 ரூபாயாகவும் காணப்படுகிறது.