மும்பை: சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் செண்டிமெண்ட் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளுக்குப் பிறகும் மாறியதாகத் தெரியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை மாலை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட நிதி அமைச்சரின் வார்த்தைகளுக்கு, அடுத்த இரண்டு நாட்களுக்கு மட்டுமே சந்தை ஏற்றம் கண்டது. அதாவது திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சந்தை ஓரளவுக்கு ஏற்றம் கண்டது.
ஆனால் நேற்றும், இன்றும் கதையே வேறாக இருக்கிறது. சென்செக்ஸ் சுமாராக 350 புள்ளிகள் சரிந்து 37,100 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அதாவது தன் 37,410 லெவல்களை உடைத்துக் கொண்டு கீழே இறங்கி தற்போது 37,000 புள்ளிகளில் சப்போர்ட் எடுத்து வர்த்தகமாகி வருகிறது. இன்று வர்த்தக நேரத்தில் இதுவரை தன் இன்றைய குறைந்தபட்ச விலையாக 37,052 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் ஆகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக 37,000 புள்ளிகள் உடை பட்டால் 36,400 அடுத்த வலுவான சப்போர்ட்டாக இருக்கும். ஒருவேளை ஏதாவது நல்ல செய்தி வந்து ஏற்றம் காணத் தொடங்கினால் மீண்டும் 37,410 முதல் ரெசிஸ்டென்ஸாக இருக்கும்.
நிஃப்டி இண்டெக்ஸிலும் இதே கதை தான். சுமார் 100 புள்ளிகள் சரிந்து 10,945 புள்ளிகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நிஃப்டியும் தன் வலுவான புள்ளியான 11,000-த்தை உடைத்துக் கொண்டு இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
இன்று காலை சென்செக்ஸ் 37,381 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி தற்போது நேற்றைய குளோசிங்கை விட 350 புள்ளிகள் இறக்கம் கண்டு 37,100 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் ஆகிக் கொண்டு இருக்கிறது. அதே போல நிஃப்டி இண்டெக்ஸும் இன்று காலை 10,996 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி தற்போது நேற்றைய குளோசிங்கை விட சுமார் 100 புள்ளிகள் இறக்கம் கண்டு 10,946 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் ஆகிக் கொண்டு இருக்கிறது.
இந்திய சந்தைகள் இப்படி இருக்க பெரும்பாலான ஆசிய சந்தைகளும் மந்தமாக வர்த்தகமாகி வருகின்றன. சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் காம்போசைட் போன்ற சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. நேற்று ஐரோபிய நாடுகளான இங்கிலாந்து, பிரான்ச், ஜெர்மனி ஆகிய நாட்டுச் சந்தைகள் ஓரளவுக்கு ஏற்றம் கண்டு இருக்கின்றன. அதே போல அமெரிக்க சந்தைகளும் கொஞ்சம் ஏற்றம் கண்டிருக்கிறது.