ஒரு வழியாக தேர்தல் அலை ஓய்ந்து முடிவுகளும் வந்து விட்டன. ஆனாலும் உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் என்பது, அடுத்தடுத்த அலையாக விஸ்வரூபம் எடுத்து அதிவேகமாக பரவி வருகின்றது.
குறிப்பாக இந்தியாவில் அதன் தாக்கம் உலக நாடுகளே திரும்பி பார்க்கும் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஒரு புறம் கூட்டம் கூட்டமாய் பாதிக்கப்படும் மக்கள், மறுபுறம் கொத்து கொத்தாய் கொரோனாவுக்கு பலியாகும் மக்கள் என வாட்டி வதைத்து வருகின்றது.
இதற்கிடையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அரசுகள், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதனால் பொருளாதார வளர்ச்சியில் மீண்டும் சரிவினைக் காணலாம் என்றும் நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.
கவலையளிக்கும் கொரோனா பாதிப்பு
கடந்த ஆண்டில் கொரோனாவினை கட்டுப்படுத்தும் விதமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததன் காரணமாக ஏற்பட்ட சரிவினையே, சரிசெய்ய இன்னும் சிறிது காலம் ஆகும் என்ற நிலை உள்ளது. இதற்கிடையில் தற்போது இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக இரண்டாம் கட்ட பரவல் வந்துள்ளது. இதனால் இது எந்தளவுக்கு பாதிப்பினை ஏற்படுத்துமோ? இது சந்தையில் எந்தளவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
வல்லரசு நாட்டின் பொருளாதாரம்
இன்று உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தாலும், அதனால் அதிகம் பாதிக்கப்பட்டது அமெரிக்கா தான். எனினும் இன்றைய நாளில் மிக வேகமான வளர்ச்சியினை காணத் தொடங்கியுள்ளதும் அமெரிக்கா தான். கொரோனா ஒரு புறம் தனது வேலையை செய்து கொண்டு இருந்தாலும், பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது அந்த நாட்டு அரசு. அதோடு மக்களையும் மீட்க மிகப்பெரிய அளவிலான திட்டங்களையும் வகுத்துள்ளது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்களின் பார்வையானது அமெரிக்காவின் பக்கம் திரும்பியுள்ளது.
தடுமாறும் ஆசிய சந்தைகள்
ஆக ஆசிய சந்தைகள் இன்று காலை தொடக்கத்திலேயே சற்று தொடக்கத்தில் தடுமாற்றத்தில் காணப்பட்டன. இதற்கிடையில் இந்திய சந்தையும் சரிவினைக் கண்டு வருகின்றது. தற்போது கொரோனாவின் தாக்கம் என்பது இருந்தாலும், பொருளாதாரத்தில் வளர்ச்சி காணத் தொடங்கியுள்ள அமெரிக்கா, மீண்டும் விரைவில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சரிவில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 117.27 புள்ளிகள் குறைந்து, 48,665.09 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 80.70 புள்ளிகள் குறைந்து, 14,550.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 604.58 புள்ளிகள் குறைந்து, 48,177.78 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 171.90 புள்ளிகள் குறைந்து, 14,459.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 641 பங்குகள் சற்று ஏற்றத்திலும், 826 பங்குகள் சரிவிலும், 82 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ, ஹெச் யு எல், இந்தஸ்இந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டைட்டன் நிறுவனம், ரிலையன்ஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ, ஹெச் யு எல், இந்தஸ்இந்த் வங்கி, பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே, டைட்டன் நிறுவனம், ரிலையன்ஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் இன்று 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிடவுள்ளன. ஆக இதனாலும் சந்தையானது அதிக ஏற்ற இறக்கத்தினை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 371.66 புள்ளிகள் குறைந்து, 48,410.70 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 89.45 புள்ளிகள் குறைந்து, 14,541.65 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.