நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன. இது கடந்த வாரத்தில் இருந்து தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில், இன்று சற்று ஏற்றத்தினை கண்டு வருகின்றது. எனினும் பெரியளவில் ஏற்றம் காணவில்லை.
அமெரிக்க பங்கு சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்திருந்தாலும், ஆசிய சந்தைகள் சில ஏற்றத்திலும், சிலவை சரிவிலும் காணப்படுகின்றன.
இதற்கிடையில் இன்று இந்திய சந்தைகள் தற்போது தடுமாற்றத்தில் காணப்படுகின்றன. இன்று காலை தொடக்கத்தில் சற்று சரிவில் தொடங்கிய நிலையில், தற்போது சற்று ஏற்றம் கண்டுள்ளது.
என்ன காரணம்
இந்தியாவில் இரண்டாம் அலையின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது சந்தைக்கு சாதகமாக பார்க்கப்பட்டாலும், மூன்றாம் கட்ட அலையானது ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்கலாம் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதற்கிடையில் சந்தை நிபுணர்களும் சந்தையானது தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் என்றும் கூறி வருகின்றனர். எனினும் நீண்ட கால நோக்கில் சந்தையானது ஏற்றம் காணலாம். ஆக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வாங்கலாம் என சமீபத்திய அறிக்கையில் கூறியிருந்தனர். இந்த நிலையில் மீடியம் டெர்மில் நிஃப்டி சற்று குறைந்து ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.
சாதகமான சர்வதேச காரணிகள்
தொடர்ந்து அதிகரித்து உருமாற்றம் அடைந்து வரும் கொரோனாவின் தாக்கம், பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற கவலையும் ஏற்படுத்தியுள்ளது. எனினும் தற்போது சர்வதேச காரணிகள் பலவும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதற்கிடையில் தான் சந்தைகள் தற்போது குறைந்து பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று தடுமாற்றத்தில் தான் காணப்பட்டது. சென்செக்ஸ் 82.73 புள்ளிகள் அதிகரித்து, 52,962.73 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 13.20 புள்ளிகள் குறைந்து, 15,821.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்தில் சற்று சரிவிலேயே தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 7.49 புள்ளிகள் குறைந்து, 52,871.51 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 8.60 புள்ளிகள் அதிகரித்து, 15,843 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து 1482 பங்குகள் ஏற்றத்திலும், 436 பங்குகள் சரிவிலும், 72 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஐடி, பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஹெல்த் கேர், பிஎஸ்இ டெக் தவிர, மற்றவை பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஒ.என்.ஜி.சி, அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், கிரசிம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டெக் மகேந்திரா, ஹெச்.யு.எல், டாடா கன்சியூமர் புராடக்ட்ஸ், என்.டி.பி.சி, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்.டிஎஃப்.சி வங்கி, பஜாஜ் பைனான்ஸ், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டெக் மகேந்திரா, என்.டி.பி.சி, ஹெச்.யு.எல், நெஸ்டில், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது சற்றே அதிகரித்து, 74.255 ரூபாயாக ஏற்றத்தில் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 76.82 புள்ளிகள் அதிகரித்து, 52,932.49 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 27.4 புள்ளிகள் அதிகரித்து, 15,861.75 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.