நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றும், பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன.
கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வந்த இந்திய சந்தைகள், தொடர்ந்து வீழ்ச்சியினையே கண்டு வருகின்றன.
இந்த வாரத்தில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி இருப்பதால் சந்தைகள் பெரியளவிலான ஏற்ற இறக்கத்தினை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது இன்னும் சரிவுக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 108.35 புள்ளிகள் அதிகரித்து, 49,966.59 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 26.90 புள்ளிகள் அதிகரித்து, 14,770.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. எனினும் தொடக்கத்தில் சந்தைகள் சற்று சரிவில் தான் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 310.04 புள்ளிகள் குறைந்து, 49,548.20 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 70.30 புள்ளிகள் குறைந்து, 14,486.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 774 பங்குகள் ஏற்றத்திலும், 687 பங்குகள் சரிவிலும், 88 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள சிப்லா, பிபிசிஎல், சன் பார்மா, பிரிட்டானியா, யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், இந்தஸிந்த் வங்கி, ரிலையன்ஸ், டைட்டன் நிறுவனம், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் லேபராட்டீஸ், என்டிபிசி, அல்ட்ராடெக்சிமெண்ட், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், ரிலையன்ஸ், இந்தஸிந்த் வங்கி, டைட்டன் நிறுவனம், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 176 புள்ளிகள் குறைந்து, 449,682.24 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 32.95 புள்ளிகள் குறைந்து, 14,711.05 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. இந்த வாரத்தில் எக்ஸ்பெய்ரி என்பதால், வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கலாம். ஆக முதலீட்டாளர்கள் சற்று கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.