இந்திய பங்கு சந்தைகள் நான்காவது வர்த்தக நாளான இன்று சந்தைகள் சற்று குழப்பத்திலேயே காணப்படுகின்றது. இது இன்று எப்படியிருக்கும் மீண்டும் ஏற்றம் காணுமா? அல்லது சரிவினைக் காணுமா? இன்று கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
இன்று எஃப் & ஓ எக்ஸ்பெய்ரியாகும். இதனால் முதலீட்டளார்கள் தங்களது லாபத்தினை புக் செய்யலாம். அடுத்த கான்ட்ராக்டுகளில் ரோல் ஓவர் செய்யலாம். இதன் காரணாமாக சந்தையில் பெரியளவிலான ஏற்ற இறக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த அமர்விலை போலவே சந்தையானது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. தொடக்கத்திலே சற்று சரிவில் தான் காணப்பட்டது.
சர்வதேச சந்தைகள்
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையானது இதுவரை இல்லாத அளவு உச்சத்தினை தொட்டுள்ளது. எனினும் அதிகரித்து வரும் ஒமிக்ரான் பரவல் மத்தியில் ஆசிய சந்தைகள் பலவும் இன்று தொடக்கத்தில் சற்று சரிவிலேயே காணப்பட்டது.
இதன் எதிரொலியாக இன்று தொடக்கத்திலேயே இந்திய சந்தைகளும் சரிவிலேயே தொடங்கியுள்ளது.
முதலீடுகள் வரத்து
தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வந்த நிலையில், டிசம்பர் 28 அன்று அன்னிய முதலீட்டாளர்கள் 207.31 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியிருந்தனர். ஆனால் மீண்டும் டிசம்பர் 29 நிலவரப்படி, 975.23 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். ஆக முந்தைய அமர்வினை காட்டிலும் மூன்று மடங்குக்கும் மேலாக முதலீடு வெளியேறியுள்ளது. இதே உள்நாட்டு முதலீட்டாளார்கள் 1006.93 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இது கடந்த அமர்வினை காட்டிலும் இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஆக இதுவும் கவனிகக் வேண்டிய ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகின்றது.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே இந்திய சந்தைகள் குழப்பத்திலேயே காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 88.63 புள்ளிகள் அதிகரித்து, 57,895.12 புள்ளிகளாகவும், நிஃப்டி 81.40 புள்ளிகள் குறைந்து, 17,132.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று சரிவில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 184.78 புள்ளிகள் குறைந்து, 57,621.71 புள்ளிகளாகவும், நிஃப்டி 50.80 புள்ளிகள் குறைந்து, 17,162.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1151 பங்குகள் ஏற்றத்திலும், 730 பங்குகள் சரிவிலும், 90 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகளும் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி 50, பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் சற்று சரிவில் காணப்படுகின்றன. மற்றவை பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
நிஃப்டி குறியீட்டில் உள்ள விப்ரோ, ஈச்சர் மோட்டார்ஸ், டாடா கன்சியூமர் டியூரபிள், பவர் கிரிட் கார்ப், டெக் மகேந்திரா உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் ஆட்டோ, லார்சன், பிபிசிஎல், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள விப்ரோ, பவர் கிரிட் கார்ப், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், டெக் மகேந்திரா, ஹெச் சி எல் டெக் உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே பஜாஜ் பின்செர்வ், லார்சன், பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
தற்போது (9.49 மணி நிலவரப்படி) சென்செக்ஸ் 96.47 புள்ளிகள் அதிகரித்து, 57,902.96 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 19.30 புள்ளிகள் அதிகரித்து, 17,232.90 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. இன்று பொதுத்துறை வங்கிகள், பார்மா, ஐடி துறை பங்குகள், கவனிக்க வேண்டிய பங்குகளாக உள்ளன.