நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. முந்தைய அமர்விலும் சற்று ஏற்றத்தில் முடிவடைந்திருந்த நிலையில், இன்றும் ஏற்றம் கண்டுள்ளது.
நாளை எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, இது முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் தங்களது லாபத்தினை புக் செய்வதாலும், ரோல் ஓவர் செய்வதாலும் இருக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில் பல சர்வதேச காரணிகள் சந்தைக்கு சாதகமாகவே உள்ளது. இந்தியாவை பொறுத்த வரையில் கொரோனா வழக்குகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், பல சர்வதேச நாடுகளும் இந்தியாவுக்கு உதவி செய்து வருகின்றன. ஆக இது இந்தியா விரைவில் மீண்டு வர வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் மீட்பு தாமதமானால், இது பொருளாதார சரிவுக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சந்தைகள் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 279.06 புள்ளிகள் அதிகரித்து, 49,223.20 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 91.50 புள்ளிகள் அதிகரித்து, 14,744.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 238.60 புள்ளிகள் அதிகரித்து, 49,182.74 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 70.30 புள்ளிகள் அதிகரித்து, 14,723.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1142 பங்குகள் ஏற்றத்திலும், 242 பங்குகள் சரிவிலும், 55 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ மெட்டல்ஸ் தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஈச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பின்செர்வ், இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹிண்டால்கோ, ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், இந்தஸிந்த் வங்கி, எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஆக்சிஸ் வங்கி, நெஸ்டில், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 15 பைசா அதிகரித்து, 74.51 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 74.66 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இது சந்தையில் முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில் ஏற்றத்தில் காணப்படுகிறது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 493.93 புள்ளிகள் அதிகரித்து, 49,438.07 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 131.40 புள்ளிகள் அதிகரித்து, 14,784.45 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.