நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் மீண்டும் பலமான ஏற்றத்தில் காணப்படுகின்றன.
கடந்த சில அமர்வுகளாகவே தடுமாற்றம் கண்டு வந்த சந்தைகள் மீண்டும் புதிய உச்சத்தினை நோக்கி சென்று கொண்டுள்ளன. இது புராபிட் புக்கிங் காரணமாக சந்தை சரிவில் இருந்திருக்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் சந்தையானது ஏற்றம் காணவே வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு நிபுணர்கள், சந்தை எப்போதெல்லாம் சரிகின்றதோ அப்பதெல்லாம் வாங்கலாம். சந்தை சரியும் எந்த வாய்ப்பினையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில் சந்தை மீண்டும் புதிய உச்சத்தினை தொடும் என்று கூறியிருந்தனர். அதனை நிரூபிக்கும் விதமாக சந்தையானது முந்தைய அமர்வில் சரிந்தாலும், இன்று மீண்டும் ஏற்ற பாதைக்கு திரும்பியுள்ளது.
முக்கிய காரணிகள்
வலுவான சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் வரத்து என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையில் ஏற்றத்தினை கண்டு முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது.
சந்தைக்கு சாதகமான காரணிகள்
குறிப்பாக அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தில் விரைவில் மாற்றம் கொண்டு வரலாம் என்ற நிலைக்கு மத்தியில், பத்திரம் வாங்குதலையும் குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் டாலரின் மதிப்பானது மீண்டும் ஏற்றம் கண்டு காணப்படுகின்றது. இதற்கிடையில் இந்திய பொருளாதாரம் குறித்த கணிப்புகளும் சாதமாக வந்து கொண்டுள்ளன. இதுவும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. சென்செக்ஸ் 367.32 புள்ளிகள் அதிகரித்து, 59,294.95 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 93.10 புள்ளிகள் அதிகரித்து, 17,639.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 352.37 புள்ளிகள் அதிகரித்து, 59,278.70 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 115.10 புள்ளிகள் அதிகரித்து, 17,661.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,398 பங்குகள் அதிகரித்தும், 256 பங்குகள் சரிவிலும், 75 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ சென்செக்ஸ், நிஃப்டி 50, பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாகவும், மற்றவை 1% கீழாகவும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள கோல் இந்தியா, பஜாஜ் பின்செர்வ், ஆக்ஸிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி லைஃப், ஐடிசி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், பிபிசிஎல், பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பின்செர்வ், ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ, இந்தஸிந்த் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐடிசி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், டிசிஎஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 73.78 ரூபாயாக அதிகரித்து தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வில் 73.86 ரூபாயாக முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 548.09 புள்ளிகள் அதிகரித்து, 59,475.42 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 161.30 புள்ளிகள் அதிகரித்து, 17,707.95 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.