நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. கடந்த அமர்வில் சற்று சரிவில் முடிவடைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
அமெரிக்காவில் வரவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற யூகத்திற்கு மத்தியில், அமெரிக்க சந்தைகள் கடந்த அமர்வில் வரலாற்று உச்சத்தினை தொட்டன. இதனால் ஆசிய சந்தைகளும் தொடர்ந்து ஏற்றத்தில் காணப்படுகிறது.
இதற்கிடையில் தான் இன்று இந்திய சந்தைகளும் தொடர்ந்து ஏற்றத்தில் காணப்படுகின்றன.
முக்கிய காரணிகள்
அமெரிக்க ஃபெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் பற்றிய முக்கிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சர்வதேச சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இது சந்தைக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. ஒரு புறம் உருமாறிய கொரோனா தாக்கம் என்பது, இனி எந்தளவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற கவலையும் எழுந்துள்ளது. எனினும் கொரோனாவினால் சரிந்த பொருளாதாரத்தினை மீட்டெடுக்க, ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 195.38 புள்ளிகள் அதிகரித்து, 53,047.65 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 30.80 புள்ளிகள் அதிகரித்து, 15,855.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 147.02 புள்ளிகள் அதிகரித்து, 52,999.29 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 52.40 புள்ளிகள் அதிகரித்து, 15,876.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1525 பங்குகள் ஏற்றத்திலும், 349 பங்குகள் சரிவிலும், 62 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் பிஎஸ்இ டெக் தவிர, மற்ற குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹிண்டால் கோ, டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ், ஹெச்.சி.எல் டெக், சன் பார்மா, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ், ஆக்ஸிஸ் வங்கி, சன் பார்மா, ஹெச்.சி.எல் டெக், ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 74.36 ரூபாயாக சற்று ஏற்றத்தில் தொடங்கியுள்ளது. இதன் முந்தைய அமர்வின் முடிவு விலையானது 74.42 ரூபாயாகும்.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 134.01 புள்ளிகள் அதிகரித்து, 52,986.28 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 48.25 புள்ளிகள் அதிகரித்து, 15,872.70 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.