டெக் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டுகளாகவே அமைந்துவிட்டன. ஏஐ வருகை, ஆட்டோமேஷன், நிறுவனங்களின் சிக்கன நடவடிக்கை என பல காரணங்களை கூறி டெக் மற்றும் ஐடி நிறுவனங்கள் திடீர் திடீரென ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன.
ஒரே மீட்டிங்கில் அனைவரையும் பணிநீக்கம் செய்வது, திடீரென மின்னஞ்சல் அனுப்பி இனி வேலை இல்லை என கூறுவது என டெக் நிறுவனங்களின் அராஜகத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான லாரி எலிசன் தலைமையிலான Oracle நிறுவனம் இன்றே கடைசி என கூறி பல ஊழியர்களுக்கு மெயில் அனுப்பி அதிர்ச்சி தந்துள்ளது.

காலை வேலையை தொடங்க லேப்டாப்பில் லாகின் செய்த ஊழியர்கள் பலரும் இன்றே இந்த நிறுவனத்தில் உங்களுக்கு கடைசி நாள் என கூறி மின்னஞ்சல் பெற்றுள்ளனர். நிறுவனம் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படுகிறது அதன் ஒரு பகுதியாகவே இந்த பணிநீக்கம் என பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரக்கிளின் தற்போதைய வணிக தேவைகளை கவனமாக பரிசீலித்து, நிறுவன மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக உங்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளோம். எனவே இன்றைய நாள்தான் உங்களது கடைசி வேலை நாளாகும் என அதில் கூறப்பட்டுள்ளது. எங்களுடன் நீங்கள் வேலை செய்த காலத்தில் வெளிப்படுத்திய அர்ப்பணிப்புக்கும் கடின உழைப்புக்கும் நன்றி அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பணிநீக்கத்தின் ஒரு பகுதியாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் நிதி இழப்பீடு குறித்த தகவல்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் கணினி, மின்னஞ்சல் மற்றும் ஃபைல்களுக்கான அணுகல் ஆகியவை விரைவில் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையிலிருந்து நீக்கப்படும் ஊழியர்களுக்கு, அவர்கள் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா ஒரு வார சம்பளம் மற்றும் 4 வாரங்களின் அடிப்படை சம்பளம் ஆகியவை தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் நிதியாண்டில் மே 31ஆம் தேதி வரை ஆரக்கிள் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 21,000 பேர் , அதாவது 13% பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை நிறுவனத்தில் சுமார் 141,000 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.
இந்நிறுவனம் அதிகளவில் ஏஐ சார்ந்த திட்டங்களுக்கு முதலீடு செய்துளது. இதனை ஈடு கட்ட தொடர்ச்சியாக செலவுகளை குறைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக படிப்படியாக ஊழியர்களை குறைத்து வருகிறது. அண்மையில் தான் சாம் ஆல்ட்மேனின் ஓபன்ஏஐ நிறுவனத்தின் பெரிய தரவு மையங்களை உருவாக்கும் பணிகளை ஆரக்கிள் தொடங்கியது. இதற்கான கட்டமைப்பு பணி, உபகரணங்கள் ஆகியவற்றுக்கு அதிகம் செலவு செய்வதால் அதிகமாக நிறுவனம் கடன் வாங்கியுள்ளது. தற்போது கடன் கழுத்தை நெறிப்பதால் ஊழியர்கள் பணிநீக்கத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
ஊழியர் பணிநீக்கங்களை பின் தொடரும் லேஆஃப் தளம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி இந்த ஆண்டில் மட்டும் 1.28 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகாரப்பூர்வமாக இல்லாமல் நடந்த பணிநீக்க எண்ணிக்கை இல்லை என்பதால் உண்மையான எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications


