நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷ்னல் வங்கி டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 306 சதவீத அதிக லாபத்தைப் பெற்றுள்ளது.
2016ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் பிஎன்பி வங்கி லாபமாக வெறும் 51.01 கோடி ரூபாய் பெற்றுள்ள நிலையில், தற்போது 207.18 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
இவ்வங்கிக்கு டிசம்பர் காலாண்டு சிறப்பாக அமைந்தாலும் செப்டம்பர் காலாண்டில் சுமார் 549.36 கோடி ரூபாய் என்ற வரலாறு காணாத லாபத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 31 உடன் முடிந்த 9 மாத காலத்தில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி சுமார் 1,062.90 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது, ஆனால் கடந்த நிதியாண்டின் இதேகாலக்கட்டத்தில் இதன் அளவு 1,392.75 கோடி ரூபாயை மொத்த லாபமாகப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பணமதிப்பிழப்புக் காலத்தில் இவ்வங்கியில் சுமார் 54,000 கோடி ரூபாய் வரை வைப்பு நிதி உயர்ந்தது, மேலும் இவை 40 சதவீதம் வரை வங்கியில் இருப்பாக இருக்கும் எனக் காலாண்டு அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் இவ்வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் சீஇஓ உஷா அனந்தசுப்பிரமணியன் தெரிவித்தார்.