எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 6%கும் மேலாக அதிகரித்து, அதன் 52 வார உச்சத்தினை தொட்டுள்ளது.
இந்த நிறுவனம் புதிய பீரிமியம் வருவாய் அதிகரித்துள்ளதாக அறிவித்ததையடுத்து இந்த ஏற்றத்தினை கண்டுள்ளது.
இன்று காலை தொடக்கத்தில் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸின் பங்கு விலையானது, 945.30 ரூபாயாக தொடங்கியது. இதன் முந்தைய அமர்வின் முடிவு விலையானது 923.90 ரூபாயாகும்.
52 வார உச்சம்
இது இண்டிராடே வர்த்தகத்தில் 6.49 சதவீதம் ஏற்றம் கண்டு 983.95 ரூபாய் உச்சத்தினை தொட்டது. எனினும் முடிவில் இந்த பங்கின் விலையானது 5.14% அதிகரித்து 971.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் சந்தை மதிப்பு 97,231.78 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதன் இரண்டு வார சராசரி அளவான 0.96 லட்சம் பங்குகளுடன் ஒப்பிடும்போது 4.51 லட்சம் பங்குகள் கைமாறியதால், பங்குகள் வாங்குவதில் அதிகரிப்பு ஏற்பட்டது.
Array
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, என்எஸ்இ- யில் இதன் இண்டிராடே உச்சமாக 983.75 ரூபாயாகவும், குறைந்தபட்ச விலையாக 939 ரூபாயினையும் தொட்டுள்ளது.
இதே பிஎஸ்இயில் இதன் பங்கு விலையானது இண்டிராடே உச்சமாக 983.95 ரூபாயாகவும், குறைந்தபட்ச விலையாக 939.50 ரூபாயினையும் தொட்டுள்ளது.
பிரீமிய வளர்ச்சி
எஸ்பிஐ மற்றும் பிஎன்பி பாரிபஸ் கார்டிப் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், புதிய வணிக பிரீமியங்களில் 21% வளர்ச்சியினை பிப்ரவரி மாதத்தில் கண்டு, 22,425 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 18,533 கோடி ரூபாயாக இருந்தது.
இன்றைய பங்கு சந்தை நிலவரம்
இதற்கிடையில் இன்று காலையில் ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள் முடிவிலும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ், 584.41 புள்ளிகள் அதிகரித்து, 51,025.48 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 142.20 புள்ளிகள் அதிகரித்து, 15,098.40 புள்ளிகளாகவும் முடிவடைந்தது.