வர்த்தகப் போரின் ஒரு கட்டமாகச் சீன பொருட்கள் மீது புதிய கட்டணங்கள் விதிக்க இருப்பதாக டிரம்ப் தெரிவித்ததை அடுத்து இந்திய பங்கு சந்தைத் தொடர்ந்து இரண்டாவது நாளாகச் சரிவை சந்தித்துள்ளது.
சென்செக்ஸ் கிட்டத்தட்ட 410 புள்ளிகள் சரிந்தும், நிப்டி 10,000 புள்ளிகளுக்கும் குறைவாகவும் இன்று வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்காவிற்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று சீனாவும் 3 பில்லியன் டாலர் இறக்குமதி மீது கட்டணங்களை விதிக்க இருக்கிறது. இதில் சிக்கி கொண்டு இந்திய பங்கு சந்தை என்ன ஆனது என்பது குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
இன்றைய பங்கு சந்தை நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 409.73 புள்ளிகள் என 1.24 சதவீதம் வரை சரிந்து 32,596.54 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 116.70 புள்ளிகள் என 1.17 சதவீதம் சரிந்து 9,998.05 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
துறை வாரியான நிலவரம்
ஆட்டோ மொபைல், ஸ்டீல், மற்றும் வங்கி துறை சார்ந்த பங்குகள் இன்று மிகப் பெரிய சரிவை சந்தித்த நேரத்தில் ஐடி, மின்சாரம் துறை சார்ந்த பங்குகள் உயர்ந்துள்ளன.
யூனியன் வங்கி
யூனியன் பாங்க் ஆப் வங்கி உட்பட 8 வங்கிகளில் கிட்டத்தட்ட 1,394.43 கோடி ரூபாய் வரை கடன் மோசடி நடைபெற்றதாக வெளியான செய்தியினை அடுத்து வங்கி நிறுவனப் பங்குகள் மட்டும் 3.6 சதவீதம் வரை சரிந்ததுள்ளன.
லாபம் ஈட்டிய பங்குகள்
அதானி போர்ட்ஸ், இன்ஃபோசிஸ், பவர் கிரிட்டு, மகேந்திரா & மகேந்திரா, கோல் இந்தியா, ஏசியன் பெயிண்ட் நிறுவன பங்குகள் இன்று லாபத்தினை அளித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
டாடா மோடார்ஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் இன்று அதிக நட்டத்தினை அளித்துள்ளன.