வாரத்தில் இரண்டாவது நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 340 புள்ளிகள் அதிகரித்து, 39,314 ஆக அதிகரித்து வர்த்தகமாகி வருகின்றது. இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 95 புள்ளிகள் அதிகரித்து, 11,599 ஆக வர்த்தகமாகி வருகின்றது.
இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.18 ரூபாயாக ஏற்றம் கண்டும் காணப்படுகிறது. இது தொடக்கத்தில் 13 பைசா அதிகரித்து, 73.16 ரூபாயாக தொடங்கியது. நேற்றைய முடிவு விலையானது 73.29 ருபாயாகும்.
இன்றைய சந்தையில் நிஃப்டி ஆட்டோ இன்டெக்ஸ் 1 சதவீதற்கும் மேலாக அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக டாடா மோட்டார்ஸ் 6 சதவீதத்திற்கும் மேலாகவும், எம் & எம் 2% மேலாகவும் காணப்படுகிறது. மற்ற முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்குகள் 1% மேலாகவும் காணப்படுகின்றது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள 744 பங்குகள் ஏற்றத்துடனும், 181 பங்குகள் சரிவுடனும், 37 பங்குகள் விலையானது, எந்தவித மாற்றம் இல்லாமலும் காணப்படுகின்றது.
ஹெச்டிஎஃப்சி, இந்தஸ்இந்த் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஏசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஆக்ஸிஸ் பேங்க், டைட்டன், கோடக் பேங்க், எம் & எம், டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட பல பங்குகாள் நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றன.
இதே பவர்கிரிட் கார்ப், சன் பார்மா, ஐடிசி, என்டிபிசி, டெக் மகேந்திரா, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் சற்று சரிவிலும் காணப்படுகின்றன.
அதோடு ஆசிய பங்கு சந்தைகள் அனைத்துமே நல்ல ஏற்றத்தில் உள்ள நிலையில், அதன் எதிரொலி இந்திய பங்கு சந்தையிலும் காணப்படுகின்றது.
இதே அமெரிக்கா பங்கு சந்தையும் திங்கட்கிழமையன்று காலை நேர வர்த்தகத்தில் சற்று சரிவினைக் கண்டு இருந்தாலும், மாலை நேரத்தில் சற்று அதிகரித்து முடிவடைந்துள்ளது. முதலீட்டாளர்கள் அரசு மீண்டும் ஒரு மிகப்பெரிய ஊக்கத் தொகையை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ள நிலையில் ஏற்றம் கண்டுள்ளதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர். அதோடு அமெரிக்க அதிபர் தான் மருத்துவமனையை விட்டு வெளியேற போவதாகவும் தெரிவித்திருந்தால், விரைவில் இந்த ஊக்கத் தொகை குறித்தான அறிவிப்புகள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் சந்தைக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டுள்ளது.