ஆசிய சந்தையின் வலிமையான வர்த்தகச் சூழ்நிலையில் எவ்விதமான பாதிப்புகளுக்கும் இல்லாமல் வர்த்தகத்தைத் துவங்கிய மும்பை பங்குச்சந்தைக்கு இன்று ஜாக்பாட் என்றே சொல்ல வேண்டும்.
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த சென்செக்ஸ் கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் சுமார் 269.33 புள்ளிகளை இழந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில், இன்று ஓரே நாள் வர்த்தகத்தில் மட்டும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 460 புள்ளிகள் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.
மும்பை பங்குச்சந்தை
ஆசிய சந்தையில் அனைத்து வர்த்தகச் சந்தைகளும் சிறப்பான வர்த்தகத்தை அடைந்த காரணத்தினால் இன்று வர்த்தகத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் துவங்கியது.
இது பன்னாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க ஏதுவாக அமைந்தது.
அமெரிக்கப் பெடரல் வங்கி
செவ்வாய்க்கிழமை அமெரிக்க அரசு 2018ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை அறிவித்த நிலையில் இந்நாட்டு மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி உயர்விற்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தியது.
இதில் அடுத்த 2 மாதங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை. இது ஆசிய சந்தைக்கும் இந்திய சந்தைக்கும் மிகவும் சாதகமாக அமைந்தது.
ஆர்டர்கள்
மேலும் இன்று மே மாதத்திற்கான ஆர்டர்கள் முடிவடையும் காரணத்தால் இந்திய சந்தையில் புதிய முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்தனர். இதனைத் தொடர்ந்து உள்நாட்டுச் சந்தையிலும் வெளிநாட்டுச் சந்தையில் இருந்தும் அதிகப்படியான முதலீடு இந்திய பங்குச்சந்தையில் குவிந்தது.
இதன் காரணமாக மதியம் 2 மணிக்கு மேல் சென்செக்ஸ் குறியீடு மளமளவென 460 புள்ளிகள் வரை உயர்ந்தது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 448.39 புள்ளிகள் உயர்ந்து 30,750.03 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே தொடர்ந்து வர்த்தக உயர்வை சந்தித்த நிஃப்டி குறியீடு இன்று வர்த்தக முடிவில் சுமார் 149.20 புள்ளிகள் வரை உயர்ந்து 9,509.75 புள்ளிகளை அடைந்தது.