கடந்த சில நாட்களாக நிலையான வர்த்தக உயர்வில் இருந்த மும்பை பங்குச்சந்தை இன்று மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்களைச் சோகத்தில்ல ஆழ்த்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தையைப் போலவே தான் ஆசிய சந்தை முழுவதும் இன்று குறைவான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது. என்ன காரணம்..?
காரணம்
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கை கூட்டத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், இக்கூட்டத்தில் எதிர்கால வர்த்தகச் சந்தைக்காக வட்டி விகிதம் உயர்த்தப்பட உள்ளதாகக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யத் தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஆசிய சந்தை
இதன் எதிரொலியாகவே ஆசிய சந்தை இன்று மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது, இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையும் குறைந்த அளவிலான முதலீட்டைப் பெற்று வர்த்தகம் முடங்கியது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 16.06 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 35,176.42 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 21.30 புள்ளிகள் சரிந்து 10,718.05 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் கோட்டாக் வங்கி இன்று 3.87 சதவீதம் வரையில் உயர்ந்து அசத்தியது. இதைத் தொடர்ந்து ஐடிசி 2 சதவீதம், ஏசியன் பெயின்ட்ஸ், எச்டிஎப்சி, எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்திருந்தது.