இந்தியாவின் பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் ஒரு மாதத்தில் 6000 புள்ளிகளுக்கு மேலாக சரிவினைக் கண்டு, முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பினை கொடுத்துள்ளது.
இது பல நிறுவனங்களின் பலவீனமான 4வது காலாண்டு முடிவுகள், திடீரென அதிகரித்த வட்டி விகிதத்தின் மத்தியில் அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், பல்வேறு நாடுகளில் நிலவி வரும் அரசியல் பதற்றம் என பல காரணிகளுக்கு மத்தியில், இந்தளவுக்கு பெரும் சரிவினைக் கண்டுள்ளது.
இதே ஒரு வாரத்தில் சென்செக்ஸ் 4.58% அல்லது 2611 புள்ளிகளை இழந்துள்ளது. இதே நிஃப்டி 4.86% அல்லது 829 புள்ளிகளை இழந்துள்ளது.
சென்செக்ஸ் ஒரு மாத நிலவரம்
ஏப்ரல் 4ம் தேதி அன்று சென்செக்ஸ் 60,611 புள்ளிகளாக இருந்த நிலையில், கடந்த அமர்வில் 54,364 புள்ளிகளாக முடிவடைந்தது. இது 6247 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது. இது சுமார் 10% மேலான சரிவு எனலாம். இது இன்னும் சரியலாம் என்றே நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நிஃப்டி 1 மாத நிலவரம்
இதே நிஃப்டியும் ஒரு மாதத்தில் 10% மேலாக சரிவினைக் கண்டுள்ளது. ஏப்ரல் 4, 2022 அன்று 18053 புள்ளிகளாக இருந்த நிஃப்டி, கடந்த அமர்வில் 16,240 புள்ளிகள் என்ற லெவலில் காணப்பட்டது. ஆக கடந்த 1 மாதத்தில் மட்டும் 1813 புள்ளிகள் அல்லது 10.04% சரிவினைக் கண்டுள்ளது.
சரிவினை ஏற்படுத்திய காரணிகள்
சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு நெருக்கடியான காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தையானது சரிவினைக் கண்டு வருகின்றது. குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனையானது மிக மோசான பிரச்சனையாக பங்கு சந்தைகளுக்கு மாறியுள்ளது. இந்த பதற்றமானது பணவீக்கத்தினை மிக மோசமாக அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. சில நாடுகளில் பணவீக்க விகிதமானது வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது.
அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்
இந்த மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து அதிகளவில் வெளியேறியுள்ளனர். மே மாதத்தில் மட்டும் 20,055 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வெளியேறியுள்ளனர். இதே ஏப்ரல் மாதத்திலும் 40,652 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வெளியேறியுள்ளனர்.
கோடக் செக்யூரிட்டீஸ் என்ன சொல்கிறது?
இது குறித்து கோடக் செக்யூரிட்டீஸ் ஆய்வறிக்கையில், வெளிப்புற காரணிகளின் படி சந்தைக்கு சாதகமான செய்திகள் எதுவும் இதுவரை வரவில்லை. கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையும் கடந்த 9 மாதங்களில் பெரும் சரிவினைக் கண்ட நிலையில், இதுவும் சந்தையின் சரிவுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. மேலும் டெக்னிக்கலாக சந்தையானது ஓவர் சோல்டு லெவலில் உள்ளது. ஆக இது 54000 - 53500 லெவலை கூட எட்டலாம். டெக்னால்ஜி மற்றும் நிதித்துறை சம்பந்தமான பங்குகள் கவனிக்கப்படவேண்டிய ஒன்று என கூறியுள்ளது.
தற்போதைய நிலவரம்?
இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சென்செக்ஸ் 658.76 புள்ளிகள் குறைந்து, 53,679.09 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது. இதே நிஃப்டி 202.65 புள்ளிகள் அதிகரித்து, 16,03.40 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.