மும்பை: காலையில் 11,271.30 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கிய நிஃப்டி தன் அதிகபட்சம் புள்ளிகளான 11,346.80 வரை உயர்ந்தது. திடீரென மார்க்கெட் சென்டிமென்டால் பல முதலீட்டாளர்கள் ஒரே நேரத்தில் தங்கள் முதலீடுகளை விற்று வெளியேறாத் தொடங்கினர்.
இந்தப் பதட்டத்தில் விஷயம் என்ன வென்று புரியாமல் மேலும் பல முதலீட்டாளர்கள் விற்க நிஃப்டி தன் இன்றைய அதிகபட்ச புள்ளியான 11346-ல் இருந்து அடுத்த சில நிமிட்ங்களில், தன் இன்றைய குறைந்த பட்ச புள்ளிகளான 10,866.45-க்கு வந்து வர்த்தகமாகத் தொடங்கியது.
இதற்கு முக்கியக் காரணமாக என்பிஎஃப்சி என்றழைக்கப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பங்குகள் இறக்கம் காணத் தொடங்கியது தான் சொல்லப்படுகிறது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்களீல் குறிப்பாக பல ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களின் பங்கு விலைகள் விரைவாகச் சரிவைக் கண்டன. சரிவின் அளவு நிறுவனத்துக்கு நிறுவனம் 10 - 50 சதவிகிதம் வரை மாறுபடுகிறது. அதிகபட்சமாக திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் 55 சதவிகித சரிவைக் கண்டது.
வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் சரிவு, உடனடியாக நிஃப்டியில் நான்கு சதவிகித சரிவாக எதிரொலித்து. இந்த எதிரொலிக்குப் பிறகு முதலீட்டுக் காண வாய்ப்பாகப் பார்த்த சுவிங் டிரேடர்கள் மற்றும் குறுகிய கால முதலீட்டாளர்கள், மீண்டும் சந்தையில் புகுந்து டி.ஹெச்.எஃப்.எல் பங்குகளை சரமாரியாக வாங்கத் தொடங்கினர். இன்னும் பல இடங்களில் டி.ஹெச்.எல்.எல் நிறுவன பங்குகளில் ஆர்டர் கூட செய்ய முடியாமல் தவித்த முதலீட்டாளர்களையும் பார்க்க முடிந்தது.
இந்த திடீர் களேப்ரத்துக்குப் பிறகு, சற்றே நிலை கொண்ட நிஃப்டி தற்போது மீண்டும் சீராக வர்த்தகமாகி வருகிறது. இந்த களேப்ரங்கள் நடந்தது எல்லாம் சுமாராக மதியம் ஒரு மணியளவில் இருக்கும். அப்போது சென்செக்ஸ் 1,100 புள்ளிகளும், நிப்டி 340 புள்ளிகளும் சரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது மதியம் 2.30 மணி அளவில் நிஃப்டி 11,055 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி சந்தைகளில் எனர்ஜி துறை சார்ந்த பங்குகளைத் தவிர மற்ற பங்குகள் பெரும்பாலும் இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன. சென்செக்ஸ் சந்தைகளில் எண்ணெய் ம்ற்றும் கேஸ் சார்ந்த பங்குகள் தவிர மற்ற இண்டெக்ஸ்கள் பலதும் இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன.
இந்தியச் சந்தைகளைத் தொடர்ந்து ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன.