அன்னிய முதலீட்டாளர்களின் அதீத முதலீட்டின் காரணமாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் முதல் முறையாக 47,026.02 புள்ளிகளை அடைந்து புதிய சாதனை படைத்த அடுத்தச் சில நிமிடங்களில் 150 புள்ளிகள் வரையில் சரிந்தது.
இதேபோல் நிஃப்டி குறியீடு 13,745.26 புள்ளிகளை அடைந்த நிலையில், சுமார் 50 புள்ளிகள் வரையில் சரிந்தது. இந்த அதிரடி சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள்
இந்திய பங்குச்சந்தையில் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்களின் அதீத முதலீட்டின் காரணமாகச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்த வருடம் மட்டும் இந்தியப் பங்குச்சந்தையில் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் சுமார் 21 பில்லியன் டாலர் வரையிலான முதலீட்டைச் செய்துள்ளனர்.
ஆசிய சந்தை
ஆசியச் சந்தைகளிலேயே இந்தியாவில் தான் இந்த வருடம் அதிகளவிலான அன்னிய முதலீடுகள் குவிந்துள்ளது. கொரோனா பாதிப்புக்குக் குறைந்து லாக்டவுன் கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்ட பின்பும், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்த பின்பு இந்தியச் சந்தையில் அதிகளவிலான முதலீடுகள் குவிந்துள்ளது.
21 பில்லியன் டாலர் முதலீடு
2020ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் சுமார் 21 பில்லியன் டாலர் தொகையை அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ள நிலையில், இதற்கு முன் அதிகப்படியாக 2012ல் 1.3 லட்சம் கோடி ரூபாய் தொகையை முதலீடு செய்துள்ளனர்.
அதிக வளர்ச்சி அடைந்த நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் மற்றும் ஹெச்சில் ஆகிய நிறுவனங்கள் 2.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து பஜாஜ் ஆட்டோ, டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் 1.5 சதவீதமும், நெஸ்லே, டைட்டன்ஸ ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியை அடைந்துள்ளது.
சரிவடைந்த நிறுவனங்கள்
இதேவேளையில் இன்டஸ்இந்த், ஹெச்டிஎப்சி, கோட்டாக் மஹிந்திரா வங்கி ஆகியவை 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை எதிர்கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், ஒஎன்ஜிசி ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை எதிர்கொண்டுள்ளது.
ஊக்க திட்டம்
அமெரிக்காவின் கொரோனா வைரஸ் பொருளாதார ஊக்கத் திட்டம் முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகளைக் குறைந்துள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் ஆசியச் சந்தையில் மந்தமான வர்த்தகச் சூழ்நிலை எதிர்கொண்டு வருகிறது.