உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் அமெரிக்கா, சீனா மத்தியில் வர்த்தகப் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சீனா, 14 பிரிவின் கீழ் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் 106 பொருட்கள் மீது 25 சதவீத வரி விதித்துள்ளது.
இதனால் சர்வதேச சந்தையில் பங்குச்சந்தை வர்த்தகம் பெரிய அளவில் பாதித்துள்ளது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சுமார் 1 சதவீதம் அளவிலான வர்த்தகம் சரிந்துள்ளது.
ஆசிய சந்தை
புதன்கிழமை வர்த்தகத்தில் சீன சந்தை 0.18 சதவீதமும், ஹாங்காங் சந்தை 2.19 சதவீதமும், தைவான் சந்தை 0.61 சதவீதமும் சரிவடைந்துள்ளது. இதன் தாக்கம் இந்திய சந்தையில் அதிகமாக இருந்தது.
மேலும் நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்கச் சந்தை 1 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வை அடைந்த காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் 350 புள்ளிகள் வரையில் மட்டுமே சரிந்துள்ளது.
சீன அறிவிப்பு
சீனாவின் இன்றைய அறிவிப்பின் மூலம் அமெரிக்கப் பங்குச்சந்தை இன்று கணிசமான சரிவு அல்லது மந்தமான வர்த்தக நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை கணிசமான உயர்வைச் சந்தித்தாலும், ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் சென்செக்ஸ் மளமளவெனச் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்க்குள்ளாகியது.
சென்செக்ஸ் மற்றும் நிப்டி
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 351.56 புள்ளிகள் சரிந்து 33,019.07 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிப்டி குறியீடு 116.60 புள்ளிகள் சரிந்து 10,128.40 புள்ளிகள் அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.