மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகளுக்கே இது கெட்ட நேரம் போல. தொடர்ந்து சந்தை 36,500 முதல் 39,000 என்கிற ரேஞ்சுக்குள்ளேயே நீண்ட நாட்களாக வர்த்தகமாகி வருகிறது சென்செக்ஸ் இண்டெக்ஸ்.
சென்செக்ஸ் சுமாராக 450 புள்ளிகள் சரிந்து 36,879 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அதாவது தன் 37,000 என்கிற உறுதியான லெவல்களை உடைத்துக் கொண்டு கீழே இறங்கி தற்போது 36,400 புள்ளிகளை சப்போர்ட் எடுத்து வர்த்தகமாகி வருகிறது. இதுவரை தன் இன்றைய நாளுக்கான குறைந்தபட்ச புள்ளியாக 36,879 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. இப்போது 36,400 தான் அடுத்த வலுவான சப்போர்ட்டாக இருக்கும். ஒருவேளை 36,400 இன்றே உடைபட்டால் 36,000 தான் அடுத்த வலுவான சப்போர்ட்டாகத் தெரிகிறது.
சந்தையில் இல்லாத ஒரு நல்ல செய்தி வந்து, முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் செண்டிமெண்ட் பாசிட்டிவ்வாக மாறி ஒருவேளை ஏற்றம் காணத் தொடங்கினால் மீண்டும் 37,000 முதல் ரெசிஸ்டென்ஸாக இருக்கும். 37,410 அடுத்த ரெசிஸ்டென்ஸாக இருக்கும்.
நிஃப்டி இண்டெக்ஸிலும் இதே கதை தான். சுமார் 145 புள்ளிகள் சரிந்து 10,878 புள்ளிகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நிஃப்டியும் தன் வலுவான புள்ளியான 11,000-த்தை உடைத்துக் கொண்டு இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
யெஸ் பேங்க், மாருதி சுசூகி, ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாகி வருகின்றன. டெக் மஹிந்திரா, பார்தி இன்ஃப்ராடெல், ஹெ சி எல் டெக்னாலஜீஸ், யெஸ் பேங்க், பிரிட்டானியா போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இந்திய ஆயில் கார்ப்பரேஷன், ஈஷர் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
இந்திய சந்தைகள் இப்படி இருக்க பெரும்பாலான ஆசிய சந்தைகளும் மந்தமாக வர்த்தகமாகி வருகின்றன. சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, தென் கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் காம்போசைட் போன்ற சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இன்று ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாட்டுச் சந்தைகள் ஓரளவுக்கு ஏற்றம் கண்டு இருக்கின்றன.