2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தாக்கலுக்குப் பின்பு கணித்தபடியே இன்று மும்பை பங்குச்சந்தை பெரிய அளவிலான சரிவை அடைந்துள்ளது.
ஆம், இன்று வர்த்தகத் துவக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 250 புள்ளிகள் வரையிலான சரிவை சந்தித்து முதலீட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்தியது.
11.45 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 533.56 புள்ளிகள் சரிந்து 35,375.30 புள்ளிகளை அடைந்திருந்தது, நிஃப்டி குறியீடு 157.30 புள்ளிகள் சரிந்து 10,859.60 புள்ளிகளை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்திற்கு 5 முக்கியமான காரணங்கள் உள்ளது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
LTCG Tax
2018-19ஆம் நிதியாண்டின் பட்ஜெட் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யப்பட்டுள்ள பங்கு முதலீட்டில் கிடைக்கும் லாபம் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் அதற்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி தாய், தந்தை, தாத்தாவிடம் இருந்து பெற்று இருந்தாலும் அதற்கும் இதே வரி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய வரியின் பெயர் long term capital gains (LTCG) வரி.
இதனால் முதலீட்டாளர்கள் இன்று அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்து வருகின்றன.
நிதிப் பற்றாக்குறை
2018ஆம் நிதியாண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறையின் அளவு நாட்டின் மொத்த ஜிடிபி அளவில் 3.2 சதவீதமாக மட்டுமே இருந்த நிலையில் தற்போது 3.5 சதவீதம் வரையில் உயரும் எனக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல் 2019ஆம் நிதியாண்டில் நிதி பற்றாக்குறையின் அளவு முன்பு 3 சதவீதமாக இருக்கும் என நம்பப்பட்ட நிலையில், தற்போது 3.3 சதவீதம் வரையில் உயரும் எனத் தெரிகிறது.
ரிசர்வ் வங்கி
பிப்ரவரி 7ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அறுவடை காலத்தைக் காரணம் காட்டி நாணய கொள்கை கூட்டம் MSF விகிதத்தை உயர்த்தும் என அறியப்படுகிறது.
இதனால் வங்கிகளில் அனைத்துக் கடன்களுக்கான வட்டியும் அதிகரிக்கும்.
குழப்பம்
பட்ஜெட் அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் சந்தையில் பல்வேறு குழப்பத்தை உருவாக்கி வருகிறது. முக்கியமாக நிலையான கழிப்பு, பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டாலும் இதர வரி உயர்த்தப்பட்டு இதிலும் எந்தவிதமான நன்மையும் அளிக்காத ஒரு நிலையைத் தற்போது உள்ளது.
மேலும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் பட்ஜெட் அறிக்கையில் எரிபொருளுக்கான மானிய உயர்வு குறித்து எவ்விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை.
இதனால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
ஆசிய சந்தை
ஜப்பானின் பாங்க் ஆஃப் ஜப்பான் பத்திர முதலீட்டில் இருக்கும் லாப அளவுகளைக் குறைக்கும் விதமாக அதிகளவிலான பத்திரங்களைச் சிறப்புப் பிரிவின் கீழ் வாங்கியது. இதனால் ஜப்பான் பங்குச்சந்தையின் நிக்கி குறியீடு 1.3 சதவீதம் வரையில் சரிவை சந்தித்தது.
இதனால் ஆசிய சந்தையில் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்தது.