கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றுடன் தற்போது நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்டுள்ள உயர்வு, உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல், பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியிலும் இந்திய பங்குச்சந்தை மீதான நம்பிக்கை குறைந்துள்ளது.
கடந்த 14 மாதத்தில் முதல் முறையாக நாட்டின் ஏற்றுமதி அளவீடுகள் சரிந்து வர்த்தகப் பற்றாக்குறையின் அளவை 35 மாதங்கள் உயர்விற்குக் கொண்டு சென்றுள்ளது.
ப்ளூ சிப் பங்குகள்
இதன் மூலம் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ப்ளூ சிப் பங்குகள் மீதான முதலீட்டை அதிகளவில் குறைத்தது. இதன் காரணமாக இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதல் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் சரிவுடேனே காணப்பட்டது.
மந்தமான காலாண்டு முடிவுகள்
மேலும் கார்பரேட் நிறுவனங்கள் இதுவரை வெளியாட்டுள்ள காலாண்டு முடிவுகளும் முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவிலான நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை. இதனால் முதலீட்டாளர் அடுத்தச் சில வாரங்களுக்குப் பங்குகளை விற்கும் போக்கை கடைப்பிடிப்பார்கள் எனத் தெரிகிறது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத் துவக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 100 புள்ளிகள் சரிவை சில நிமிடங்களிலேயே தொட்டுவிட்டது. இதன் வாயிலாகத் தொடர் சரிவில் இருந்து சென்செக்ஸ் குறியீடு 181.43 புள்ளிகள் வரையில் சரிந்து 32,760.44 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டி குறியீடு தொடர் சரிவை சந்தித்து 68.55 புள்ளிகள் சரிந்து 10,118.05 புள்ளிகளை அடைந்தது.