மார்ச் 31 முதல் 2016-17 நிதியாண்டு முடிந்த நிலையில் 2017-18ஆம் நிதியாண்டின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகத் துவக்கம் முதலே நிலையான வர்த்தக உயர்வில் முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதனுடன் நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்படுதவது உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் கூடுதலாகக் கவர்ந்துள்ளது.
வராக்கடன்
தற்போதைய நிலையில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியப் பிரச்சனையாக விளங்குவது வங்கிகளில் இருக்கும் வராக்கடன், இதனை முழுமையாகத் தீர்க்க வங்கிகளுக்கு மத்திய அரசு உதவி செய்ய உள்ளதாகவும், ஜிஎஸ்டிக்குப் பின் நிதியமைச்சர் அருண் ஜேட்லி இப்பிரச்சனையைக் கையில் எடுக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார வளர்ச்சி
இதன்பின் இந்தியா நடப்பு நிதியாண்டில் 7.7 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
அதிரடி உயர்வு
இத்தகைய சாதகமான சூழ்நிலையில் இன்றும் வர்த்தகம் சந்தை துவங்கிய நிலையில், துவக்கம் முதல் முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய சந்தையில் முதலீடு செய்து வந்தனர். இதன் எதிரொலியாகச் சென்செக்ஸ் குறியீடு 29,900 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு வரலாறு காணாத உயர்வையும் அடைந்துள்ளது.
சென்செக்ஸ்
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடர் வர்த்தக உயர்வில் 289.72 புள்ளிகள் உயர்வில் 29,910.22 புள்ளிகளை அடைந்துள்ளது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு இன்று 64.10 புள்ளிகள் உயர்ந்து 9237.85 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
உயர்வு
இன்றைய வர்த்தகத்தில் எல்&டி, டாக்டர் ரெட்டி, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, கெயில், எச்டிஎப்சி, ஏசியன் பெயின்ட்ஸ் ஆகியவை மிகப்பெரிய அளவிலான உயர்வை அடைந்துள்ளது.
சரிவு..
அதேபோல் இன்றைய வர்த்தகத்தில் பார்தி ஏர்டெல், விப்ரோ, இன்போசிஸ், பஜாஜ் ஆட்டோ, டிசிஎஸ், என்டிபிசி, லுபின் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.