ஜிஎஸ்டி அமைப்பின் அதிரடி வரிக் குறைப்பின் காரணமாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்துள்ளனர். இதன் காரணமாகக் காலை முதல் நிலையான உயர்வுடன் இருந்த மும்பை பங்குச்சந்தை ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் கூடுதல் உயர்வைச் சந்தித்தது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் வெளியேறிய ஐரோப்பிய முதலீட்டாளர்கள் இன்று அதிகளவில் முதலீடு செய்து மும்பை பங்குச்சந்தையைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றனர்.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 251.29 புள்ளிகள் உயர்வில் 35,511.58 புள்ளிகளை அடைந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்ததது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 77.70 புள்ளிகள் உயர்வில் 10,894.70 புள்ளிகள் தொட்டு வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் அதானி போர்ட்ஸ், யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ வங்கி, டிசிஎஸ், கோட்டாக் வங்கி ஆகியவை 1.39 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது.