மும்பை: கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றிய அச்சத்தால் இந்திய சந்தைகள் படு பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
சொல்லப்போனால் வாரத்தின் இறுதி நாளான இன்று சர்வதேச சந்தையின் எதிரொலி காரணமாக இந்திய சந்தைகள் படு வீழ்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1,448 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 38,297 ஆக வீழ்ச்சி கண்டுள்ளன. இது 3.64% வீழ்ச்சியாகும்.
இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 431 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,201 ஆக முடிவடைந்துள்ளது. இது கிட்டதட்ட 4% வீழ்ச்சியாகும்.
இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 0.76% வீழ்ச்சி கண்டு 72.15 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. இது தவிர நிஃப்டி 50, பிஎஸ் இ சென்செக்ஸ், நிஃப்டி பேங்க், நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஸ்மால்கேப், மிட்கேப் நிஃப்டி ஆட்டோ உள்ளிட்ட துறை குறியீடுகள் படு வீழ்ச்சியுடனும் காணப்படுகிறது.
கொரோனாவின் தாக்கம் தற்போது பல நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், சர்வதேச சந்தைகளும் படு வீழ்ச்சி கண்டுள்ளன. இந்த சர்வதேச சந்தைகளின் அழுத்தம் இந்திய சந்தையிலும் காணப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இதுதவிர இன்று வெளியாக இருக்கும் டிசம்பர் காலாண்டு ஜிடிபி குறித்த குறியீடுகள் மேலும் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்றும் கூறலாம்.
சர்வதேச ஜிடிபி விகிதத்தில் சுமார் 15% பங்கு வகிக்கும் சீனாவின் ஜிடிபி விகிதம், சீனா அடி வாங்கும் போது அது நிச்சயம் உலக ஜிடிபியிலும் எதிரொலிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் சர்வதேச சந்தையில் நிலவி வரும் அழுத்தம் காரணமாக இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து ஆறாவது தினமாக வீழ்ச்சி கண்டு வருகின்றன.
அதிலும் கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் இருந்தாலும், உண்மையான சோதனை இனி தான் உள்ளது என சில தினங்களுக்கு முன்பு சில பொருளாதார நிபுணர்கள் கூறியிருந்தனர். ஏனெனில் கொரொனாவின் தாக்கம் சற்று கொஞ்சம் நாட்களுக்கு தான் என்றாலும், அதனால் ஏற்படும் பொருளாதார தாக்கம் மிக சோதனையை அளிக்கும் விதமாகவே இருக்கும் என்றும் கூறப்பட்டது. உண்மையில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தாலும், அதன் பொருளாதார தாக்கம் அடுத்த காலாண்டுகளிலும் நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆக இதன் தாக்கமே இன்று இந்திய பங்கு சந்தையிலும் காணப்பட்டது. இது தவிர கொரோனாவால் துறை வாரியாக செல்லும் போது ஐடி, உள்கட்டமைப்பு துறை, பொதுத்துறை, எனர்ஜி, ஆட்டோமொபைல் துறை, வங்கிகள், ஆயில் மற்றும் கேஸ் உள்ளிட்ட துறைகள் வீழ்ச்சி காணலாம் என்ற நிலையில் இத்துறை பங்குகளும் வீழ்ச்சி கண்டுள்ளன.