மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை ஆசிய சந்தையின் நிலையான முதலீட்டின் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு கணிசமான உயர்வைச் சந்தித்தாலும் நிலையான வர்த்தகச் சூழ்நிலையில் இருந்தது.
இன்றைய வர்த்தகத்தில் வங்கி, ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் அதிகளவிலான முதலீடு குவிந்தது, ஆனால் ஐடி, ஆட்டோமொபைல், கேப்பிடல் கூட்ஸ் ஸ்டாக்ஸ் ஆகிய துறை சார்ந்த நிறுவன பங்குகள் அதிகளவிலான விற்பனையைச் சந்தித்தது.
இதன் வாயிலாக ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்வில் இருந்து சரிந்தது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 8.18 புள்ளிகள் உயர்ந்து 35,216.32 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 2.30 புள்ளிகள் உயர்ந்து 10,717.80 புள்ளிகளை எட்டி செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையில் டாப் 30 நிறுவனங்களில் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி 6.86 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, அதேபோல் எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, பவர் கிரிட், பார்தி ஏர்டெல், என்டிபிசி நிறுவனங்கள் கணிசமான உயர்வைச் சந்தித்து இருந்தது.