மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் துவங்கியது முதல் தொடர் சரிவு பாதையில் இருந்த காரணத்தால் முதலீட்டாளர்கள் அதிகளவிலான இழப்பை எதிர்கொண்டனர்.
இன்றைய சரிவுக்கு மிக முக்கியக் காரணம், வெளிநாட்டுச் சந்தை முதலீட்டாளர்கள் லாப நோக்கிற்காகவும், தன் நாட்டு வர்த்தகச் சந்தையில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள் காரணமாகவும் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை வெளியேற்றியுள்ளனர்.
சென்செக்ஸ் நிஃப்டி குறியீடு
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 586.66 புள்ளிகள் சரிந்து 53,000 புள்ளிகள் அளவீட்டை இழந்து 52,553.40 புள்ளிகளை அடைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 171 புள்ளிகள் சரிந்து 15,752.40 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.
ரூ.1.2 லட்சம் கோடி இழப்பு
இந்த வர்த்தகச் சரிவில் சந்தையின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் அதிகளவிலான சரிவை அடைந்த காரணத்தால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 1.2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை இழந்துள்ளனர். இந்தச் சரிவுக்கு முழுமையான மற்றும் முக்கியமான காரணம் என்ன..?!
அமெரிக்கா மற்றும் ஆசியச் சந்தைகள்
கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் மீண்டு வரும் வேளையில் பணவீக்கம் பாதிப்பு மற்றும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று ஆகியவற்றின் காரணமாக அமெரிக்கா மற்றும் ஆசியச் சந்தைகள் சரிவுடன் காணப்படுகிறது.
வேலைவாய்ப்பின்மை
குறிப்பாக அமெரிக்கச் சந்தை அரசு உதவித் தொகை பெறும் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை கணிக்கப்பட்டதை விடவும் அதிகமாக உள்ளது. இது கணிக்கப்பட்ட அளவை விடவும் அதிகமாக இருப்பதாகவும், தற்போது அதிகரித்து வரும் கொரோனா அமெரிக்கப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று
இதேவேளையில் அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகில் பல நாடுகளில் புதிதாகக் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. புதிதாகப் பரவி வரும் கொரோனா உலகப் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதிக்கும் பல பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆசிய சந்தை சரிவு
இன்று காலை முதல் ஜப்பான், சீனா, ஹாங்காங், தென் கொரியா, நியூசிலாந்து, தைவான் ஆகிய முக்கியமான வர்த்தகச் சந்தை அனைத்தும் பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது. இந்தச் சரிவில் தற்போது மும்பை பங்குச்சந்தையும் சேர்ந்துள்ளது.