கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்கு சந்தைகள் அதிக ஏற்ற இறக்கத்தினை கண்டு வந்த நிலையில், இன்று பலத்த சரிவினைக் கண்டுள்ளது.
குறிப்பாக சென்செக்ஸ் 1,158.63 புள்ளிகள் சரிவினைக் கண்டு, 59,984 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தையின் குறியீடு எண் நிஃப்டி கிட்டத்தட்ட இரண்டு சதவிகிதம் அல்லது 353.70 புள்ளிகள் சரிவினைக் கண்டு, 17,857.25 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
இன்று காலை முதல் கொண்டே சற்று சரிவில் இருந்து வந்த சந்தையானது, தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்த நிலையில், முடிவில் பலத்த சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது. இதற்கு என்ன காரணம்? ஏன் இந்த சரிவு? வாருங்கள் பார்க்கலாம்.
வங்கி பங்குகள் பலத்த சரிவு
குறிப்பாக வங்கித் துறையை சார்ந்த ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் 3 சதவீதத்துக்கு மேலாக சரிவை கண்டு முடிவடைந்துள்ளன. இதே ஐடிசி நிறுவனம் 5% மேலாக வீழ்ச்சி கண்டு முடிவடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பென்ச் மார்க் குறியீடுகள் 25% மேலாக அதிகரித்திருந்த நிலையில், இன்று பலமான சரிவினைக் கண்டுள்ளது.
மார்கன் ஸ்டான்லி அறிவிப்பும் ஒரு காரணம்
இது மீடியம் டெர்ம் மற்றும் சில்லறை வர்த்தகர்களுக்கு பெரும் இழப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்கன் ஸ்டான்லி நிறுவனம் இந்தியா ஈக்விட்டிகள் மீதான மதிப்பினை குறைத்துள்ள நிலையில், இது இன்றைய சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடுகள் வெளியேற்றம்
மேலும் கடந்த சில தினங்களாகவே உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பானது தொடர்ந்து சற்று அதிகரித்து வந்தாலும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டினை வெளியேற்றி வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அன்னிய முதலீடுகளின் விகிதமானது, 10,000 கோடி ரூபாய்க்கு மேல் வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக இதுவும் சந்தையில் பலத்த சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
டெக்னிக்கல் பேட்டர்ன்
நிஃப்டி டெக்னிக்கலாக இன்னும் சற்று சரியும் விதமாகவே காணப்படுகின்றது. இதன் அடுத்த சப்போர்ட் விகிதமாக 17650 என்ற அளவுக்கு செல்லலாம். இதனை உடைத்து சென்றால் 17450 - 17,250 வரையில் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே மீண்டும் ஏற்றம் கண்டால் 18,150 - 18,300 வரையில் ஏற்றம் காணலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பணவீக்கம் குறித்த அச்சம்
பணவீக்கம் குறித்தான அச்சமும் சர்வதேச அளவில் அதிகரித்து வருவது மேற்கொண்டு சந்தைக்கு எதிராக அமைந்துள்ளது. மேலும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவின் தாகத்தின் மத்தியில், இது இன்னும் பொருளாதாரத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவும் சந்தையின் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
செல்லிங் பிரஷர் அதிகம்
மேலும் வரவிருக்கும் நாட்களிலும் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம். இது மேற்கொண்டு சந்தையில் செல்லிங் பிரஷர் அதிகம் உள்ள நிலையில், மேற்கொண்டு சரிவினைக் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் மேற்கொண்டு புராபிட் புக்கிங் செய்யலாம் என்பதால், இன்று சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.