உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவின் தாக்கத்திற்கு, இந்தியா மட்டும் விதி விலக்கா என்ன? இதுவரையில் 147 பேர் தாக்கம் அடைந்துள்ள நிலையில், 3 மரணமும் நிகழ்ந்துள்ளது.
கொரோனாவில் இந்த தாக்கம் ஒரு புறம் எனில், இதனால் ஏற்பட போகும் பொருளாதார இழப்புகள் மறுபுறம். எந்த அளவுக்கு பேரழிவை ஏற்படுத்த போகிறதோ தெரியவில்லை.
அதிலும் சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் அதே நேரத்தில், அதனால் ஏற்படும் பொருளாதார பேரழிவையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். சொல்லப்போனால் அதனை சுனாமியுடன் ஒப்பிட்டிருந்தார்.
சந்தைகள் வீழ்ச்சி
ஆக இது எந்தளவுக்கு பேரழிவை ஏற்படுத்துமே என்ற பயத்தினாலேயே இந்திய சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன. சொல்லப்போனால் அவ்வப்போது சற்று ஏற்றம் கண்டாலும் வீழ்ச்சி என்பதே இங்கு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இன்று காலையில் சற்று சரிவில் தொடங்கிய மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் கிட்டதட்ட 12 மணியளவில் 876 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 29,702 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 258 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 8,708 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.
ரூபாயில் பெரிதும் மாற்றம் இல்லை
இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.17 ரூபாயாக பெரிய அளவில் மாற்றம் இன்றி காணப்படுகிறது. இன்று காலையிலேயே சந்தை சரிவுடன் தொடங்கிய நிலையில், சற்று இடைவெளியில் கிடைத்த லாபத்தினை புக் செய்ய முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்திருக்கலாம். இதனால் இவ்வாறு சரிவினைக் கண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் தான் முக்கிய காரணம்
இது ஒரு புறம் என்றாலும், முக்கிய காரணம் கொரோனா வைரஸ் பற்றிய கவலைகள் தான் அதிகம் சந்தையை வீழ்ச்சியடைய செய்கின்றன. ஏனெனில் இது பொருளாதாரத்தில் எந்தளவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும். அரசு பொருளாதாரத்தினை மேம்படுத்த எந்த மாதிரியான நடவடிக்கையினை எடுக்க போகிறது என்ற நம்பிக்கைக்கு மத்தியில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன.
யெஸ் பேங்க் ஏற்றம்
ஆனால் இந்த வீழ்ச்சியிலும் கூட யெஸ் பேங்க் சற்று ஏற்றத்துடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இன்று மாலையுடன் அதன் பிரச்சனைகள் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இன்று மாலை ஆறு மணிக்கு மேல் எப்போதும் போல வங்கிச் சேவைகள் தொடங்கப்படும் என்றும், வங்கிக்கு தேவையான பணம் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இது எல்லாவற்றையும் விட, இது எப்போதும் போல தனியார் வங்கியாகவே செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் இந்த பங்கின் விலை 5.97% அதிகரிக்க இது வழி வகுத்துள்ளது.
அனைத்து குறியீடுகளும் சரிவு தான்
வழக்கம் போல சந்தை குறியீட்டில் உள்ள அத்துணை குறியீடுகளும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டுள்ளன. இதே போல இந்தஸ்தங்க் பேங்க், எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ரிலையன்ஸ், பார்தி இன்ப்ராடெல், பஜாஜ் பைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட பங்குகள் பலத்த வீழ்ச்சியுடனும் காணப்படுகிறது.
சற்று ஏற்றம்
ஆனால் இந்த ரணகளத்திலும் ஜீ எண்டர்டெயின்மென்ட், யெஸ் பேங்க், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் சற்று ஏற்றம் கண்டுள்ளது. கோல் இந்தியா, ஐடிசி, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் சற்று ஏற்றம் கண்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது சென்செக்ஸ் 1210 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 29,369 ஆகவும், நிஃப்டி 319 புள்ளிகள்வீழ்ச்சி கண்டு 8,647 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.