மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தையின் தாக்கத்தின் எதிரொலியாக 600 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது. ஆனால் இந்தச் சரிவு பல்வேறு காரணங்கள் எதிரொலியாக யாரும் எதிர்பார்க்காத வகையில் 1980 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் இழக்கும் அளவிற்கு மோசமான வர்த்தகத்தை உருவாக்கியுள்ளது.
இதனால் ரீடைல் முதலீட்டாளர்கள் இன்றைய வர்த்தகம் சீக்கிரம் முடியாது என்று எதிர்பார்க்கும் அளவிற்கு மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 7.76 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இன்று இழந்துள்ளனர்.
பட்ஜெட் எதிர்பார்ப்பு
மத்திய அரசு 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை வெளியிட இன்னும் ஒரு வார காலம் மட்டுமே இருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில் பட்ஜெட் மீதான நம்பிக்கை பெரிய அளவில் குறைந்த காரணத்தால் தங்களது முதலீட்டா பெரிய அளவில் வெளியேற்றி வருகின்றனர். இன்று மெட்டல், ஐடி, மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் அதிகளவில் சரிவை எட்டியுள்ளது
5 நாள் தொடர் சரிவு
மும்பை பங்குச்சந்தை இன்றுடன் 5 நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது. குறிப்பாகப் பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய வாரம் முதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாக விளங்கும் நிலையில், வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே சென்செக்ஸ் 1980 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது. இந்தப் பாதிப்பு நடப்பு வாரம் முழுவதும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்
அமெரிக்காவில் நிலவும் மந்தமான பொருளாதார வளர்ச்சி, அதிகரித்து வரும் பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் மத்திய வங்கியின் பெடரல் ரிசர்வ் பணப்புழக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கையும், வட்டியை உயர்த்தவும் முடிவு செய்துள்ளது. இதற்கான இறுதி முடிவுகளை எடுக்கும் 2 நாள் நாணய கொள்கை கூட்டம் நாளை அதாவது செவ்வாய்க்கிழமை துவங்க உள்ளது.
அன்னிய முதலீட்டாளர்கள்
இந்தக் கூட்டத்தில் அமெரிக்கப் பெடரல் வங்கி கட்டாயம் பணப்புழக்கத்தைக் குறைப்பு அல்லது வட்டி உயர்வு குறித்த அறிவிப்புக் கட்டாயம் அறிவிக்கும் என எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருக்கும் நிலையில் உலக நாடுகளில் இருக்கும் அன்னிய முதலீடுகள் வெளியேறத் துவங்கியுள்ளது. இன்று மும்பை பங்குச்சந்தையின் 7.76 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு இழப்பிற்கு அன்னிய முதலீட்டாளர்களின் முதலீட்டு வெளியேற்றம் மிகவும் முக்கியக் காரணமாக விளங்குகிறது.
காலாண்டு முடிவுகள்
இந்திய சந்தையில் வோடபோன் ஐடியா உட்படப் பல முன்னணி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மந்தமாக இருக்கும் நிலையில், பல முன்னணி நிறுவனங்களின் பங்குகள் இன்று அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை வெளியேற்றினர்.
புதிய ஐபிஓ நிறுவனங்கள்
சமீபத்தில் இந்திய ஐபிஓ சந்தையைக் கலக்கிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், மதிப்பீடுகள் தற்போது முதலீட்டாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பேடிஎம், சோமேட்டோ, நைகா உட்படப் பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இன்று அதிகப்படியான சரிவை பதிவு செய்துள்ளது.
ரஷ்யா
அனைத்தையும் தாண்டி ரஷ்யா - உக்ரைன் மத்தியில் வெடித்துள்ள பிரச்சனை ஆசிய சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கப் பங்குச்சந்தை சரிவை தாண்டி இன்று ஆசிய சந்தையை அதிகம் பாதித்தது ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை தான்.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1,545.67 புள்ளிகள் சரிந்து 57,491.51 புள்ளிகளை அடைந்துள்ளது. நிஃப்டி குறியீடு 468.05 புள்ளிகள் அதிகரித்து 17,149.10 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.