இந்திய பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்யும் காரணத்தால் கடந்த 5 நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 2000 புள்ளிகள் சரிந்து முதலீட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பங்குச்சந்தையின் நிலை
இன்றைய வர்த்தக முடிவில் கூட மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1.17 சதவீதம் அளவில் சரிந்து 585 புள்ளிகளை இழந்துள்ளது. இதன் வாயிலாக வியாழக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 49,216.52 புள்ளிகளை அடைந்துள்ளது. இதேவேளையில் நிஃப்டி குறியீடு 163.45 புள்ளிகள் சரிந்து 14,557.85 புள்ளிகளை அடைந்துள்ளது.
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் செய்ய விரும்பவில்லை என அறிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் குறைவான அளவு தொடரும், தற்போது வட்டி விகிதம் பூஜ்ஜியத்திற்கு நிகராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகப் பங்குச்சந்தைகள்
இதன் எதிரொலியாக உலகளவில் பங்குச்சந்தைகள் சரிவில் இருந்து மீண்டு இன்றைய வர்த்தகத்தை உயர்வுடன் முடித்துள்ளது. குறிப்பாக ஆசிய சந்தைகள் லாபகரமான நிலையை அடைந்துள்ளது.
இந்தியாவில் பாதிப்பு
ஆனால் இந்தியாவில் இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தலா 1 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை அடைந்து 5 நாள் தொடர் சரிவை எட்டியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்திய பங்குச்சந்தையின் சரிவுக்கு உண்மையிலேயே என்ன காரணம்..?
பயமுறுத்தும் கொரோனா தொற்று
இந்தியாவில் பெரும் நகரங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கியப் பகுதிகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாகக் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து மக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் இந்தச் சூழ்நிலையில் கொரோனா தொற்று அதிகரிப்பது கொரோனா வைர்ஸ் தொற்றின் 2வது அலையாகப் பார்க்கப்படுகிறது.
கொரோனாவின் முதல் அலை
கொரோனாவின் முதல் அலையில் இந்திய பொருளாதாரமும், இந்திய மக்களும் உயிர் பிழைத்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வரும் நிலையில் 2வது அலை மிகப்பெரிய தடுமாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் லாக்டவுன்
இந்தியாவில் பல பகுதிகளில் ஏற்கனவே பல வகையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் விரைவில் இந்தியா முழுவதும் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கும் வாய்ப்புகளும் உருவாகியுள்ளது. 2வது முறை லாக்டவுன் அறிவிக்கப்பட்டால் மக்களின் நிதி ஆதாரம் , வேலைவாய்ப்பு என அனைத்தும் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ளும்.
5 மாநில தேர்தல்
குறிப்பாக 5 மாநிலத்தில் தற்போது தேர்தல் நடக்கும் காகணத்தால் கொரோனா தொற்று எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, சேலம், கோவை ஆகிய பகுதிகளில் புதிய தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அமெரிக்கா அரசின் அறிவிப்பு
இதேவேளையில் அமெரிக்கா அரசு அறிவித்துள்ள 1.9 டிரில்லியன் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் அமெரிக்கப் பத்திர சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்கப் பத்திர சந்தையில் கிடைக்கும் லாப அளவுகள் 13 மாத உயரத்தில் உள்ளது.
அமெரிக்க முதலீட்டாளர்கள்
இந்த மாபெரும் வாய்ப்பை விடக்கூடாது என்பதற்காக அமெரிக்க முதலீட்டாளர்கள் பன்னாட்டுச் சந்தைகளில் செய்து வந்த முதலீடுகளைத் திரும்பபெற்று அமெரிக்கப் பத்திர சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் வாயிலாகவே இந்திய பங்குச்சந்தையில் அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பன்னாட்டு முதலீட்டாளர்கள் ஆதிக்கம்
பொதுவாக இந்திய பங்குச்சந்தையில் உள்நாட்டு முதலீட்டாளர்களை விடவும் பன்னாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டின் அளவு மிகவும் அதிகம். இதன் வாயிலாகவே தற்போது அதிகப்படியான பாதிப்பு இந்திய சந்தையில் உருவாகியுள்ளது.
அதிகப்படியான பாதிப்புகள்
பன்னாட்டு முதலீட்டாளர்களின் அதிகப்படியான பங்கு விற்பனை மூலம் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்களும் அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் டாக்டர் ரெட்டி, இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக் ஆகிய நிறுவனங்கள் 3 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை எதிர்கொண்டு உள்ளது.
அமெரிக்க டாலர்
இதுமட்டும் அல்லாமல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் அதிகளவிலான பாதிப்பு அடைந்து வருகிறது. இன்றை நாணயை சந்தை வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 72.30 ரூபாயில் இருந்து 72.70 ரூபாயாகச் சரிந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
ரூபாய் மதிப்பில் ஏற்பட்டு உள்ள இந்தச் சரிவு நாட்டின் வர்த்தகச் சந்தையை மட்டும் அல்லாமல் இறக்குமதி பொருட்களின் விலையையும் அதிகளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாகக் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெருமளவிலான பாதிப்பை உருவாக்கும்.