இந்திய முதலீட்டாளர்களை 6 மணிநேரம் கதற விட்ட மும்பை பங்குச்சந்தை, வர்த்தக முடிவில் ரத்தக்களறியாக மாறியது என்றால் மிகையில்லை. இன்றைய வர்த்தகச் சரிவில் பெரும் முதலீட்டாளர்களை விடவும் ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டனர்.
கடந்த வாரம் இந்தியாவில் புதிதாக உருவாகியுள்ள கொரோனா தொற்றுக் காரணமாக அதிகளவிலான முதலீடுகள் வெளியேறிய நிலையில் கடந்த சில நாட்களாகக் காலை வர்த்தகத்தில் நிலையான உயர்வு ஏற்பட்டது. இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட மொத்த வர்த்தக உயர்வும் காணாமல் போனது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகப்படியாக ஒரே நாளில் 2148.83 புள்ளிகள் சரிந்துள்ளது.
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் 51,039.31 புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 48,890.48 புள்ளிகளுக்குச் சரிந்தது. வர்த்தக முடிவில் 49,099.99 புள்ளிகளை எட்டியது.
இதேபோல் நிப்டி குறியீடு வர்த்தக முடிவில் 568.20 புள்ளிகள் சரிந்து 14,529.15 புள்ளிகளை அடைந்து இன்றை வர்த்தகம் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மோசமான வர்த்தகச் சரிவின் எதிரொலியாக முதலீட்டாளர்கள் சுமார் 5.43 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தை முதலீட்டு மதிப்பை இழந்துள்ளனர். இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு 1,450 கோடி ரூபாய் முதலீட்டு மதிப்பை இன்று முதலீட்டாளர்கள் எதிர்கொண்டனர்.
அமெரிக்கப் பத்திர சந்தையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வளர்ச்சியின் காரணமாக லாபத்திற்காக இந்தியச் சந்தையில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்ப பெற்றனர். இதனால் வாயிலாகவே இன்று மும்பை பங்குச்சந்தை கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு உள்ளது.
இதனால் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இருக்கும் அனைத்து நிறுவனங்களுமே இன்று சரிவடைந்துள்ளது.