சீன அரசு, அமெரிக்காவின் 50 பில்லியன் டாலர் வர்த்தக மதிப்புடைய பொருட்கள் மீது வரியை உயர்த்த திட்டமிட்ட நிலையில், தற்போது அமெரிக்க அரசு, 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது 10 சதவீத வரியை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் இரு நாடுகள் மத்தியில் தணிந்திருந்த வர்த்தகப் போர் பதற்றம் மீண்டும் ஆசிய சந்தையில் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா - சீனா இடையில் உருவாகியுள்ள இந்த வர்த்தகப் போர் பதற்றத்தின் வாயிலாக ஆசிய சந்தை இன்று அதிகளவிலான சரிவை சந்தித்தது. ஆஸ்திரேலியா 0.06% சரிவும், சீனா 3.78% சரிவும், ஹாங்காங் 2.76% சரிவும், ஜப்பான் 1.77% சரிவும், தைவான் 1.65 சதவீத சரிவும் சந்தித்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 261.52 புள்ளிகள் சரிந்து 35,286.74 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 89.40 புள்ளிகள் உயர்ந்து 10,710.45 புள்ளிகள் எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஐடிசி, ஒஎன்ஜிசி, ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்டிஎப்சி ஆகியவை மட்டுமே உயர்வை அடைந்துள்ளது.
வேதாந்தா, அதானி போர்ட்ஸ், மஹிந்திரா, ரிலையன்ஸ், இண்டஸ்இந்த் வங்கி ஆகியவை அதிகளவிலான சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.