இந்திய ரிசர்வ் வங்கியின் இரு நாள் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் சந்தை கணித்ததை போலவே ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கை குழு ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளார்.
இன்றைய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவில் ஆர்பிஐ நடப்பு நிதியாண்டில் 4வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இன்றைய உயர்வின் மூலம் 5 முறையாக அதிகரித்துள்ளது.
ஆர்பிஐ அறிவிப்பு சந்தை முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, ஆர்பிஐ அறிவிப்புக்கு பின்பும் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு சரிவில் உள்ளது.
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
இரு மாத நாணய கொள்கை முடிவில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 6.25 சதவீதமாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி அளவு 7 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது, 2023ஆம் நிதியாண்டில் நாட்டின் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தடாலடியாகச் சரிந்தது. ஆர்பிஐ அறிவிப்பு சந்தை முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீடு செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் 62,626.36 புள்ளிகளை அடைந்தது. புதன்கிழமை காலை வர்த்தகம் தடுமாற்றத்துடன் துவங்கிய நிலையில் 62,759 புள்ளிகள் வரையில் உயர்ந்தது. ஆனால் ஆர்பிஐ முடிவுக்குப் பின்பு 62,404.74 புள்ளிகளாகக் குறைந்துள்ளது.
டாப் 30 நிறுவனங்கள்
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களில் பஜாஜ் பின்சர்வ் அதிகப்படியாக 2 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்தது. விப்ரோ, இண்டஸ்இந்த், ஹெச்சிஎல் டெக், என்டிபிசி ஆகியவை 1 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்தது.
நிஃப்டி சந்தை
ஹிந்துஸ்தான் யூனிலீவர், எல் அண்ட் டி, ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, பார்தி ஏர்டெல், நெஸ்லே இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஆகியவை உயர்வுடன் உள்ளது.நிஃப்டி சந்தையில் FMCG, பொதுத்துறை வங்கி குறியீடு தவிர அனைத்தும் சரிந்துள்ளது.
5 சதவீத சரிவு
புதன் கிழமையன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் பல பங்குகள் 5 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது. அதே சமயம், முன்னணி ப்ளூ சிப் பங்குகளும் அடுத்தடுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிவை சந்தித்துள்ளது.
முக்கியப் பங்குகள்
மும்பை பங்குச் சந்தையில் ககன் கேஸ் (18.35 சதவீதம் சரிவு), ஜே. தபரியா ப்ரோஜ்க்ட் (10.09 சதவீதம் சரிவு), இந்தியாநிவேஷ் லிமிடெட் (9.99 சதவீதம் சரிவு), டைனமிக் புராடக்ட் (9.98 சதவீதம் சரிவு) மற்றும் கன்ட்ரி காண்டோஸ் (9.91 சதவீதம் சரிவு) ஆகியவை இன்றைய காலை வர்த்தகத்தில் 5 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது.
நிஃப்டி
நிஃப்டியில் டாப் 50 பங்குகளில் 11 நிறுவன பங்குகள் மட்டுமே லாபகரமான நிலையில் வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் சுமார் 39 நிறுவன பங்குகள் சிவப்பு நிறத்தில் வர்த்தகச் சரிவை சந்தித்துள்ளது. நிஃப்டி குறியீடும் கிட்டத்தட்ட 70 புள்ளிகள் சரிந்துள்ளது.
52 வார உயர்வு, சரிவு
மும்பை பங்குச்சந்தையில், AAA டெக்னாலஜிஸ், Add-Shop E-Retail மற்றும் பியூச்சர் கன்ஸ்யூமர் ஆகியவை புதிய 52 வார சரிவை பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் டிரான்ஸ்கார்ப் இண்டர்நேஷ்னல், இன்டோ US Bio-Tech, RR பைனான்சியல், SBEC சுகர் லிமிடெட் மற்றும் ஆதித்யா கன்ஸ்யூமர் ஆகியவை இன்றைய வர்த்தகத்தில் 52 வார உச்சத்தைத் தொட்டு உள்ளது.