அமெரிக்கா, சீனா இடையில் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்து வரும் காரணத்தால் ஆசிய சந்தை முழுவதும் மந்தமான வர்த்தகச் சூழ்நிலை நிலவி வருகிறது. இதுமட்டும் அல்லாமல் கர்நாடகாவில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார் என்பதில் பெரிய குழப்பமே நிலவி வரும் நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியிலும் குழப்பம் உருவாகி வருகிறது.
மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 80 டாலர் என்ற அளவை அடைந்துள்ளதால் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை அதிகளவில் அதிகரிக்கும் எனக் கருத்து நிலவுகிறது.
இதன் எதிரொலியாக 4வது நாளாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சரிவை சந்தித்துள்ளது. இன்று காலை வர்த்தகம் துவங்கும் முதலே சென்செக்ஸ் குறியீடு 300.82 புள்ளிகள் சரிந்து 34,848.30 புள்ளிகளை அடைந்தது, இதேபோல் நிஃப்டி குறியீடு 86.30 புள்ளிகள் சரிந்து 10,596.40 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் எல் அண்ட் டி, ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் ஆகி நிறுவனங்கள் இன்று 3 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்தது.