செப்டம்பர் காலாண்டுக்கான ஜிடிபி அறிக்கை இன்று வெளியாகும் நிலையில், காலையில் மந்தமான வர்த்தகத்தை மட்டுமே பதிவு செய்தது. அதுமட்டும் அல்லாமல் இன்று நவம்பர் மாதத்திற்கான ஆர்டர்கள் முடிவடையும் காரணத்தால் முதலீட்டாளர்கள் அதிகளவிலான லாப நோக்கில் பங்குகளை விற்றனர்.
மேலும் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையின் அளவீடு ஏப்ரல்-அக்டோபர் வரையிலான காலத்தில் 5.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் தாக்கமும் மும்பை பங்குச்சந்தையில் இன்று அதிகமாகத் தெரிந்தது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகம் காலாண்டு ஜிடிபி அறிக்கை வெளியீடு, நவம்பர் ஆர்டர்கள் மற்றும் வர்த்தகப் பற்றாக்குறை பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகக் காலை வர்த்தகம் துவக்கத்திலேயே 130 புள்ளிகள் சரிவில் துவங்கிய சென்செக்ஸ் குறியீடு ஐரோப்பிய சந்தையில் துவக்கத்தில் கூடுதலாகச் சரிவைச் சந்தித்தது.
ஐரோப்பிய சந்தை
மதியம் 2 மணிநேரம் வரையில் 200 புள்ளிகள் மட்டுமே சரிந்து காணப்பட்ட நிலையில் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் 460 புள்ளிகள் வரையில் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத்தில் முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ல் குறியீடு 453.41 புள்ளிகள் சரிந்து 33,149.35 புள்ளிகள் வரையில் சரிந்தது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டி குறியீடு 134.75 புள்ளிகள் வரையில் சரிந்து 10,226.55 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் டாக்டர் ரெட்டி, என்டிபிசி ஆகிய நிறுவனங்கள் 0.45%, 0.36% அளவிற்கு உயர்ந்தது. டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் மீதமுள்ள 28 நிறுவனங்களும் அதிகளவிலான சரிவை சந்தித்தது. இதில் அதிகப்படியாக விப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ், எஸ்பிஐ, கோட்டாக் ஆகிய வங்கிகள் 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்தது.